முன்னாள் போக்குவரத்து அமைச்சர் லுய் டக் இயூ, சீனாவுக்கான புதிய சிங்கப்பூர்த் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் தொடர்பான நியமன கடிதத்தைத் திரு லுய்யிடம் அனுப்பியுள்ளதாக அதிபர் ஹலிமா யாக்கோப் இன்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். திரு லுய் தமது கடமைகளைச் சிறப்பாக நிறைவேற்றுவார் என நம்புவதாக திருவாட்டி ஹலிமா தெரிவித்தார்.
திரு லுய் இதற்கு முன்னதாக ஜப்பானுக்கான சிங்கப்பூரின் தூதராக 2017ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து பணியாற்றினார். 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பணியாற்றிய திரு ஸ்டேன்லி லோவுக்கு அடுத்து திரு லுய் தற்போது பதவி ஏற்கிறார்.
ஆகஸ்ட் 2015ஆம் ஆண்டில் அரசியலிலிருந்து ஓய்வெடுத்ததற்கு முன்னர் திரு லுய் போக்குவரத்து அமைச்சராகவும் இரண்டாவது தற்காப்பு அமைச்சராகவும் பணியாற்றினார். 58 வயது திரு லுய், இதற்கு முன்னதாக தகவல், தொடர்பு மற்றும் கலைகளுக்கான அமைச்சராகவும் இரண்டாவது வெளியுறவு அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

