உட்லண்ட்ஸ் அவென்யூ 2ஐ நோக்கிச் செல்லும் துணைச் சாலையில் நேற்று முன்தினம் லாரியுடன் விபத்துக்குள்ளான 22 வயது மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்தார்.
உதவிக்கான அழைப்பு காலை 8.15 மணிக்கு போலிசாருக்குக் கிடைத்தது. சம்பவ இடத்திலேயே அந்த மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது. இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட 27 வயது லாரி ஓட்டுநர் விசாரணைக்கு உதவி வருகிறார்.
மத்திய விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் சிலேத்தார் விரைவுச்சாலை வழியாக, உட்லண்ட்ஸ் அவென்யூ 2ஐ நோக்கிச் செல்லும் துணைச் சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது.
சாலையில் மோட்டார்சைக்கிள் விழுந்து கிடப்பதையும் அதன் முன்புறத்தில் லாரி நிற்பதையும் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட படங்கள் காட்டின. சம்பவ இடத்தில் மருத்துவ உதவியாளர்கள் காணப்பட்டனர். அப்படங்களில் நீல நிற போலிஸ் கூடாரத்தையும் காண முடிந்தது.

