நடைபாதையில் இன்று (நவம்பர் 5) முதல் மின்ஸ்கூட்டருக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது வாடிக்கையாளர்கள் உணவுக்காகக் கூடுதல் நேரம் காத்திருக்க நேரிடும் அல்லது உணவு விநியோகம் ரத்து ஆகக்கூடும் என்று கிராப்ஃபுட் உணவு விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது.
மற்றொரு உணவு விநியோக நிறுவனமான 'டிலிவரூ' தொடர்ந்து நடைபாதையில் மின்ஸ்கூட்டர்களை ஓட்டும் ஊழியர்களுடன் தான் இணைந்து செயல்படாது என்றும் கூறியுள்ளது.
சிங்கப்பூரில் கிராப்ஃபுட், ஃபுட்பாண்டா, டிலிவரூ ஆகிய நிறுவனங்கள் உணவு விநியோகத் துறையில் செயல்படும் மூன்று பெரிய நிறுவனங்கள் ஆகும்.
பிடோக்கில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபாதையில் சைக்கிளோட்டி சென்ற 65 வயது திருவாட்டி ஓங் பீ எங் (படம்) வேகமாக வந்த மின்ஸ்கூட்டர் ஒன்றால் மோதப்பட்டு கடும் காயங்களுக்கு ஆளானார்.
இதனைத் தொடர்ந்து போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின், இந்தத் தடை குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். மின்ஸ்கூட்டர் தொடர்பிலான விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.

