மொத்தம் $250,000க்கும் மேல் மதிப்புள்ள பல நாடுகளைச் சேர்ந்த பணத்தைச் சிங்கப்பூருக்குள் கொண்டு வந்த போது, அதைப் பற்றி சிங்கப்பூர் குடிநுழைவுச் சோதனை ஆணையத்திடன் தெரிவிக்காததால் அந்த ஆடவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திரு டியன் சியொங் சை, 42, என்பவருக்கு இந்தக் குற்றத்திற்காக $6,000 அபராதம் விதிக்கப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர். கடந்த பிப்ரவரி மாதம், உட்லண்ட்ஸ் குடிநுழைவுச் சோதனைச் சாவடி ஆணையத்தில் காரில் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது கத்தை கத்தையாக
சிங்கப்பூர் டாலர்களும் 10 நாடுகளைச் சேர்ந்த பணமும் அவரிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பணத்தைப் பற்றி திரு டியன் அதிகாரியிடம் தெரிவிக்கவில்லை. சிங்கப்பூருக்குள் $20,000க்கு மேல் பணத்தையோ, அந்த மதிப்புடைய வெளிநாட்டுப் பணத்தையோ சட்டவிரோதமாகக் கொண்டு வருவோருக்கு $50,000 வரை அபராதமும், மூன்று ஆண்டுகள் வரை சிறையும் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம்.

