லெண்டோர் அவென்யூவில் ஏற்பட்ட வாகன விபத்தில் முப்பது வயது பெண் பாதசாரி உயிரிழந்தார். அந்தப் பெண்ணுடன் இருந்த நான்கு வயது சிறுவன் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.
செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) காலை 10.54 மணிக்கு அங் மோ கியோ அவென்யூ 6ஐ நோக்கிச் செல்லும் லெண்டோர் அவென்யூவில் ஒரு கார் இரண்டு பாதசாரிகள்மீது மோதியதை போலிசார் உறுதி செய்தனர். "வாகனத்தால் மோதப்பட்ட இருவருமே கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அவர்களில் அந்த மாது டான் டொக் சேங் மருத்துவமனையில் உயிரிழந்தார்," என்றனர் போலிசார்.
உயிரிழந்த மாது ஒரு பணிப்பெண் என்றது ஸ்டாம்ப் செய்தித்தளம். இதன் தொடர்பில் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
பிற்பகல் 12.10 மணிக்கு விபத்து நடந்த இடத்தைக் கண்டதாக சேவை 857 பேருந்துக்குள் இருந்த வாசகர் ஒருவர் படங்கள் எடுத்து அனுப்பியதாக ஸ்டாம்ப் செய்தித்தளம் தெரிவித்திருக்கிறது.

