பொதுத் தேர்தலில் தான் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சியான சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜான் டான் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனால் ஜான் டான் பொதுத் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு 5,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தலில் போட்டியிடும் தகுதியை அவர் இழந்தார். ஒருவர், குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு குறைந்தது ஒரு வருடம் சிறைத் தண்டனையோ அல்லது குறைந்தது 2,000 வெள்ளி அபராதமோ விதிக்கப்பட்டால் சட்டப்படி அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்துவிடுவார்.
சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் துணைத் தலைவரான டான், சட்டப்படி குற்றம் என்று குறிப்பிடுவது இதுபோன்ற செயல்களுக்குப் பொருந்தாது என்று நீதிமன்றத்தில் வாதாடினார். ஆனால் நீதிபதி அய்டிட் அப்துல்லா அவரது வாதத்தை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்ட தீர்ப்பில் குற்றச்செயல் எனக் குறிப்பிடுவது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்செயலும் பரந்த அளவிலான குற்றவியல் குற்றச்செயல்களில் அடங்கும் என்று நீதிபதி தெரிவித்தார்.
சமூக ஆர்வலர் ஜோலோவான் வாம் தொடர்பான விவகாரத்தில் டான் தெரிவித்த கருத்து நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளானது. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்பட்டு அவர் குற்றவாளி எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.