"பாலியல் உறவுக்கு இணங்கவில்லை என்பதால் காதலியை அடித்துத் துன்புறுத்தியதாக மருத்துவர் டியோ ஷுன் ஜி, 35, மீது தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணையில், "என் காதலியை நான் அடித்ததாக எனக்குக் கொஞ்சமும் ஞாபகம் இல்லை," என்று கூறியுள்ளார்.
இதை ஏற்க அரசு தரப்பு வழக்கறிஞர் மறுத்துள்ளார். அப்போது நடந்த சிலவற்றை மட்டும் உங்களால் நினைவுபடுத்திக் கூற முடியும். ஆனால் குமாரி லிம்மை அடித்தது மட்டும் உங்கள் நினைவில் இல்லை என்று கூறுவதை ஏற்க முடியாது. மருத்துவர் அவரது வசதிக்கேற்பப் பேசுகிறார் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞரான திரு பங் கூறியுள்ளார்.
"சம்பவம் நடந்த நாளன்று உறங்கிக் கொண்டிருந்த நான் குமாரி லிம்மின் அழுகுரல் கேட்டு எழுந்தேன். இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் என் காதில் விழுந்தது. கதவைத் தட்டியும் திறக்கப்படாததால் போலிசை அழைத்தேன். போலிஸ் வந்து பல முறை முயன்று கதவை உடைத்துத் திறந்தனர். அப்போது எனது மகன் பேச்சின்றி படுக்கையில் படுத்துக் கிடந்தார். குமாரி லிம், புலம்பியதால் தான் நான் போலிசை அழைக்க வேண்டியதாயிற்று.
"தனது மகன் மது அருந்தியிருந்தால் என்னிடமோ அவரது மகளிடமோ கடினப் போக்கில் நடந்து கொள்ள மாட்டார். அமைதியாகவே காணப்படுவார்," என்று மருத்துவர் டியோவின் தந்தை திரு டியோ கிம் போ, 64, கூறினார்.
மருத்துவர் டியோ தற்போது $15,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரியில் விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

