சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 1,000 பேர் வீடில்லாமல் திறந்தவெளியில் படுத்து உறங்குவதாக லீ குவான் இயூ பொதுக் கல்விக் கழகத்தைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் இங் கோக் ஹோ நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ள நிலையில், அத்தகையோருக்கு அடைக்கலம் தரும் அமைப்புகள் பற்றி தகவல் வெளியாகி உள்ளது.
அரசாங்கத்துடன் சேர்ந்து சமய அமைப்புகளும் அறநிறுவனங்களும் வீடில்லாதோருக்கு அடைக்கலம் தரும் பணியில் கடந்த ஆறு மாதங்களாக மும்முரமாக இறங்கி உள்ளன.
இவ்வாண்டின் இறுதி காலாண்டுக்குள் மஸ்கட் ஸ்திரீட்டில் உள்ள சுல்தான் பள்ளிவாசலும் இயோ சூ காங் தேவாலயமும் வீடில்லாதோருக்கு அடைக்கலம் வழங்க தொடங்கும்.
வீடில்லாதோருக்கு ஏற்கெனவே நான்கு தேவாலயங்கள், ஒரு கோயில், ஓர் அறநிறுவனம் ஆகியவை அடைக்கலம் தந்து வருகின்றன.
அங் மோ கியோ வட்டாரத்தில் உள்ள கிறைஸ்ட் தி கிங் தேவாலயம் கடந்த ஆண்டிலிருந்து
வீடில்லாதோருக்கு அடைக்கலம் தந்து வருகிறது.
புக்கிட் பாத்தோக்கில் உள்ள செயிண்ட் மேரி தேவாலயம் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இந்த
நற்பணியைச் செய்து வருகிறது.
வீடில்லாதோருக்கு சேவையாற்றும் நியூ ஹோப் சமூகச் சேவைகள் அமைப்பு கடந்த மே மாதம் ஜாலான் குகோவில் சேஃப் சவுண்ட் ஸ்லீப்பிங் பிளேஸ் எனும் இடத்தை வீடில்லாதோருக்காக திறந்து
வைத்தது.
சைனாடவுனில் அமைந்துள்ள தூத் ரெலிக் புத்தர் கோயில் கடந்த ஜன் மாதத்திலிருந்து இச்சேவையைத் தொடங்கியுள்ளது.
கடந்த செம்டம்பர் மாதத்திலிருந்து பிரின்செப் ஸ்திரீட் பிரஸ்பட்டேரியன் தேவாலயமும் தோ பாயோ மெத்தடிஸ்ட் தேவாலயமும் வீடில்லாதோருக்கு அடைக்கலம் தந்து வருகின்றன.
வீடில்லாதோருக்கு அடைக்கலம் தருவது தொடர்பாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சு பல்வேறு சமூக அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இதன் காரணமாக வீடில்லாதோருக்கு அடைக்கலம் தரும் அமைப்புகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
வீடில்லாதோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண செயல்படும் அமைப்புகளுடனான ஒருங்கிணைப்பை அமைச்சு வலுப்
படுத்தி உள்ளதாக அமைச்சின் செய்திதொடர்பாளர் தெரிவித்தார்.
வீடில்லாதோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் கொள்கைகள், திட்டங்கள் முதலியவற்றை மறுஆய்வு செய்ய 2018ஆம் ஆண்டு மே மாதத்தில் அமைப்புகளுக்கு இடையிலான பணிக் குழு அதிகாரபூர்வமாக அமைக்கப்பட்டது.
இந்தப் பணிக் குழுவில் தற்போது 11 அரசாங்க அமைப்புகள் இருக்கின்றன.
அவற்றில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், மனிதவள அமைச்சு, சிங்கப்பூர் போலிஸ் படை ஆகியவை அடங்கும்.