நாடு இதுவரை செய்துகொண்டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள், கூடுதலான சிங்கப்பூரர்கள் வேலை பெற வழிசெய்திருப்பதாக வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.
குறிப்பாக சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக உடன்பாடு, இந்தியாவிலிருந்து இங்கு வருவோருக்குக் குடிநுழைவுச் சலுகைகளை வழங்குவதாக நிலவும் கருத்து பொய்யானது என்று தெரிவித்தார் அமைச்சர் சான்.
நிச்சயமற்ற பொருளியல் நிலையில் இதுபோன்ற பொய்த் தகவல்களைப் பரப்பி சிங்கப்பூரர்களிடையே பிரிவினையைத் தூண்டும் இத்தகைய நடத்தைக்கு எதிராகவும் அவர் எச்சரித்தார்.
சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான முழுமையான பொருளியல் ஒத்துழைப்பு உடன்பாடு, இந்தியாவிலிருந்து இங்கு வருவோருக்கு நிபந்தனையற்ற குடிநுழைவுச் சலுகைகளை வழங்குவதில்லை என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
சிங்கப்பூரர்களின் வேலைவாய்ப்புகளை இங்கு வரும் இந்திய நாட்டவர் தட்டிப் பறிப்பதாகக் கூறப்படுவது சரியல்ல என்று சுட்டிய அமைச்சர் சான், 2005ஆம் ஆண்டில் இந்த உடன்பாடு கையெழுத்தாகியதிலிருந்து கிட்டத்தட்ட 400,000 சிங்கப்பூரர்களுக்கு உயர் திறன் வேலைகள் கிடைத்துள்ளதாக பகிர்ந்துகொண்டார்.
இதுபோன்ற வேலைகளில் அமர்த்தப்படும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை இதனால் 50 விழுக்காட்டிலிருந்து 56.8% ஆகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
“சிங்கப்பூர், இந்தியா இடையிலான இந்த உடன்பாடு உள்ளிட்ட நம் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் அனைத்தும் நம் நாட்டின் வர்த்தகங்களுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தி இருப்பதுடன் சிங்கப்பூரர்களுக்கு மேம்பட்ட வேலைகளை உருவாக்கியுள்ளன,” என்றார் திரு சான்.