மக்கள் செயல் கட்சியின் ‘4ஜி’ எனப்படும் நான்காம் தலைமுறை தலைமைத்துவம், எவ்வேளையிலும் உயர்தர நம்பிக்கையையும் நேர்மையையும் பாதுகாத்து நிலைநாட்டும் என்று கூறியுள்ளார் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்.
கட்சியின் 65 ஆண்டு விருதுகள் மற்றும் மாநாட்டில் நேற்று பேசிய திரு ஹெங், சிங்கப்பூரின் வெற்றிக்கு அடித்தளமாக இருந்து வரும் இவ்விரு தகுதிகளையும் ‘4ஜி’ தலைமைத்துவம் கடைப்பிடிக்கும் என்றும் சிங்கப்பூரர்களுடனான பங்காளித்துவத்திற்கே முன்னுரிமை அளிக்கும் என்றும் சொன்னார்.
இதன் காரணமாகவே சென்ற வாரம் பாட்டாளிக் கட்சியின் அல்ஜுனிட்-ஹவ்காங் நகரமன்ற நிர்வாகம் குறித்து தாம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ததாக மக்கள் செயல் கட்சியின் முதலாம் உதவித் தலைமைச் செயலாளருமாகவும் உள்ள திரு ஹெங் தெரிவித்தார்.
அல்ஜுனிட்-ஹவ்காங் நகரமன்றத்தின் அனைத்து நிதி விவகாரங்களிலிருந்தும் பாட்டாளிக் கட்சியின் சில்வியா லிம், லோ தியா கியாங் ஆகியோர் விலகி இருக்க வேண்டும் என்ற தீர்மானம் நாடாளுமன்றத்தில் இம்மாதம் ஐந்தாம் தேதியன்று நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையே இந்தத் தீர்மானத்தைத் தாக்கல் செய்திருக்கக்கூடாது என்று சில ஆதரவாளர்கள் நினைப்பதைத் தாம் அறிந்திருந்தாலும் எதிர்க்கட்சியினர் மௌனமாக இருப்பது தவறாகிவிடும் என்றார்.
“இந்த விவகாரங்கள் மிகக் கடுமையானவை. தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளின் நேர்மை இதில் சம்பந்தப்பட்டுள்ளது,” என்று தீர்மானத்தைத் தாக்கல் செய்ததற்கான காரணத்தை விளக்கினார் திரு ஹெங்.
“ஆட்சியில் இருப்பதால் நாட்டின் நிர்வாகத்தில் நேர்மை இருப்பதை உறுதிசெய்வது எங்கள் பொறுப்பு. கொள்கை தொடர்பான இந்த விவகாரத்தில் நாம் தெளிவான முடிவை எடுக்க வேண்டும், எடுத்திருக்கிறோம்,” என்றார் அவர்.
இந்தத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டதன் மூலம் சிங்கப்பூரர்கள் எதிர்பார்க்கும் ஓர் உயர்ந்த தரத்தைத் தங்களுக்குத் தாங்களே வகுத்துக்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டினார்.
‘சிங்கப்பூரை ஒன்றாக முன்னேற்றுவோம்’ என்ற கருப்பொருளில் அமைந்த மாநாட்டில், திரு ஹெங் சிங்கப்பூரர்களின் ஒத்துழைப்பையும் நாடினார். நாட்டின் எதிர்காலத்தை நான்காம் தலைமுறை தலைவர்கள் மட்டுமே உருவாக்க முடியாது என்றும் அவர்களிடத்தில் நம்பிக்கை கொண்டு சிங்கப்பூரர்கள் இணைந்து செயலாற்ற வேண்டும் என்றும் அவர் விளக்கினார்.
அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன் கட்சி கூடும் கடைசி கூட்டமாக இது இருக்கக்கூடும் என்று குறிப்பிட்ட திரு ஹெங், தலைவர்கள் பிரசாரக் காலகட்டத்தில் கூறுவதை மட்டும் கொண்டு சிங்கப்பூரர்கள் முடிவெடுக்காமல் கடந்த ஐந்து ஆண்டுகளில் தலைவர்கள் ஆற்றியுள்ள பணிகளையும் கடந்த 65 ஆண்டுகளில் கட்சி புரிந்துள்ள சாதனைகளையும் நினைத்துப் பார்க்கவேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.