தனது பணிப்பெண்ணைச் சித்ரவதை செய்த பெண்ணின் தண்டனையின் கடுமை குறைக்கப்பட்டுள்ளது. கண்பார்வையை இழந்த அந்தப் பெண்ணின் நிலைக்கு 47 வயது சுஸானா போங் சிம் சுவானின் சித்ரவதை காரணமல்ல என்பதை உயர்நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து அவரது சிறைத்தண்டனை எட்டு மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட அவருக்கு முதலில் ஓராண்டு எட்டு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
2015ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் தேதி, பணிப்பெண் குமாரி தான் தான் சோ பயன்படுத்திய தைல எண்ணெயின் வாடை தனக்குப் பிடிக்காததால் போங் ஆத்திரத்தில் அந்தத் தைலத்தின் கண்ணாடி போத்தலால் அவரது கண்ணத்தை அடித்ததாக நீதிமன்ற விசாரணையில் தெரிய வந்தது. இதற்கு முன்னதாக போங் தன் பணிப்பெண்ணின் கண்களில் அடிக்கடி குத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
2013ஆம் ஆண்டில் போங்கின் வீட்டில் வேலைக்குச் சேர்ந்தபோது அந்தப் பணிப்பெண்ணுக்கு கண் கோளாறு எதுவும் இல்லை. ஆயினும், பணிப்பெண் கண்பார்வை இழந்ததற்கு போங்கின் சித்ரவதைதான் காரணம் என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியாத நிலையில் முன்னதாக வழங்கப்பட்ட தண்டனை மிகவும் கடுமையானது என்று நீதிபதி சுவா கூறி தண்டனைக் காலத்தைக் குறைத்தார்