ஆசிய, உலகளவில் பசுமை திட்டங்களின் அடிப்படையில் முக்கிய நிதி மையமாக சிங்கப்பூரை உருவாக்கும் நோக்கில் அமெரிக்க டாலர் 2 பில்லியனை (S$2.7 பி.) செலவு செய்ய சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளது.
பொருளியல், வர்த்தக வளர்ச்சிக்கு அடிப்படையானது நிதி ஆதாரம். அதுவே முதலீட்டு முடிவுகளையும் தொடர் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துச் செல்கிறது என்று கல்வி அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
“பருவநிலை தொடர்பான செயல்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் பருவநிலை மாற்றங்களால் ஏற்படக்கூடிய தாக்கத்தைக் குறைக்கவும் அதற்கேற்ப நம்மை சரிசெய்துகொள்ளவும் பசுமை திட்டத்தின் அடிப்படையிலான நிதி ஆதாரம் வேண்டும்,” என்றார் அவர். வருடாந்திர நிதி தொழில்நுட்பத் துறை விழாவான ‘ஃபின்டெக்’ நிகழ்ச்சியில் நேற்று திரு ஓங் உரையாற்றினார்.
சிங்கப்பூர் நாணய ஆணைய பசுமை செயல்திட்டத்தின் பல புதிய முயற்சிகளை அவர் நேற்று தொடங்கி வைத்தார்.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பசுமை நிதித் திட்டத்தை உருவாக்குவதில் முன்னிலையில் இருக்கும் நோக்கத்தில் சிங்கப்பூர் இந்த முயற்சிகளை முன்னெடுக்கிறது.
கடன் வாங்குவது, கடன் கொடுப்பது, முதலீடு செய்வது போன்ற நிதிச் சேவைகளை இந்த பசுமை நிதித் திட்டம் உள்ளடக்கும். அவை பருவநிலை மாற்றத்தைச் சமாளிப்பது போன்ற சுற்றுச்சூழலுக்கு ஆக்ககரமானதாக அமையும். அவற்றில் ஒன்று, பசுமை திட்டங்களில் அதிகம் முதலீடு செய்வது. அதையொட்டி சிங்கப்பூர் நாணய ஆணையம் S$2.7 பில்லியன் பசுமை முதலீடுகள் திட்டத்தைத் தொடங்கும்.
இது பசுமை பாதுகாப்பில் முதலீடு உத்திகளை இலக்காக கொண்டிருப்பதுடன் சிங்கப்பூர் நிதி நடவடிக்கைகளையும் திறன்களையும் ஆழப்படுத்துவதில் கடப்பாடு கொண்ட சொத்து மேலாளர்களையும் பெற்றிருக்கும்.
இத்திட்டத்தின் ஓர் அங்கமாக, உலகளாவிய பசுமை நிதி முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் முறிகளுக்காக நாணய ஆணையம் அமெரிக்க டாலர் 100 மில்லியனை ஒதுக்கும். நீடித்து நிலைத்த கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் வெளிப்புற ஆய்வாளர்களை ஈடுபடுத்துவதற்குமான செலவுகளைச் சமாளிக்க மானியத் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படும்.