சைக்கிள் மீது மோதி அதை ஓட்டிய பெண்மணிக்கு மரணம் விளைவித்ததாக மின்ஸ்கூட்டர் ஓட்டுநர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
65 வயது திருவாட்டி ஓங் பீ எங்கிற்கு மரணம் விளைவித்ததாக மலேசியரான 20 வயது ஹெங் கீ பூன் மீது நேற்று குற்றம் சுமத்தப்பட்டது.
சிங்கப்பூர் நிரந்தரவாசியான ஹெங், கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி இரவு 10.20 மணி அளவில் பிடோக் நார்த் ஸ்திரீட் 3ல் உள்ள புளோக் 539க்கு அருகில் குறைந்தது மணிக்கு 26 கிலோ மீட்டரிலிருந்து 28 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் மின்ஸ்கூட்டரை ஓட்டியதாகக் கூறப்படுகிறது.
விதிமுறையின்படி மின்ஸ்கூட்டரை மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் ஓட்டக்கூடாது.
அப்போது அவ்வழியாக சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த திருவாட்டி ஓங் மீது அவர் மோதியதாகக் கூறப்படுகிறது.
அதிலும் பதிவு செய்யப்படாத தனிநபர் நடமாட்டச் சாதனத்தை ஹெங் ஓட்டிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
அனுமதிக்கப்பட்ட 20 கிலோ மீட்டர் எடையைவிட இரு மடங்கு அதிகம் கொண்ட மின்ஸ்கூட்டரை ஹெங் ஓட்டியதாகக் கூறப்படுகிறது.
விபத்தின் காரணமாக திருவாட்டி ஓங்கிற்கு மூளையில் படுகாயம் ஏற்பட்டது.
அவரது விலா, கழுத்து பட்டை ஆகிய பகுதிகளில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டன.
சாங்கி பொது மருத்துவமனையில் திருவாட்டி ஓங் அனுமதிக்கப் பட்டபோது அவர் சுயநினைவின்றி இருந்தார்.
கோமாவுக்குச் சென்ற திருவாட்டி ஓங், நான்கு நாட்கள் கழித்து உயிரிழந்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஹெங்கிற்கு ஐந்தாண்டு வரை சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
திருவாட்டி ஓங் ஒரு விதவை என்றும் அவருக்கு இரண்டு பிள்ளைகளும் இரண்டு பேரப்பிள்ளைகளும் இருப்பதாக அவரது நண்பர்களும் உறவினர்களும் தெரிவித்தனர்.
மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனம் கொண்ட திருவாட்டி ஓங்கின் மரணம் அவரது குடும்பத்தைச் சோகத்தில் ஆழ்த்தியது.
திருவாட்டி ஓங்கின் மரணத்துக்குப் பிறகு தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்று குரல்கள் எழுந்தன.
தனிநபர் நடமாட்டச் சாதனங்களைத் தடை செய்யக் கோரி change.org எனும் இணையப்பக்கத்தில் பலர் கையெழுத்திட்டனர்.
நேற்றைய நிலவரப்படி அதில் 75,000க்கும் மேற்பட்ட கையெழுத்துகள் பதிவாகியுள்ளன.
2017ஆம் ஆண்டிலும் கடந்த ஆண்டிலும் நடைபாதைகளில் தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் தொடர்பான 228 விபத்துகள் நிகழ்ந்தன.
அவற்றில் 196 விபத்துகளில் பாதிக்கப்பட்டோருக்குக் காயம் ஏற்பட்டது.
இந்நிலையில், இம்மாதம் 5ஆம் தேதியிலிருந்து நடைபாதைகளில் மின்ஸ்கூட்டர் ஓட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறுபவர்களுக்கு மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனையும் $2,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
இவ்வாண்டு இறுதி வரை தடையை மீறுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும். ஆனால் அடுத்த ஆண்டிலிருந்து தண்டனை விதிக்கப்படும்.