பணிப்பெண்ணை அடித்துத் துன்புறுத்திய குற்றத்துக்காக தண்டனை விதிக்கப்பட்ட பெண் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ததை அடுத்து, அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை குறைக்கப்பட்டுள்ளது.
47 வயது சுசேனா போங் சிம் சுவான் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கும் பணிப்பெண் பார்வை இழந்ததற்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனக் கூறிய மேல்முறையீடு நீதிமன்றம் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையைக் குறைத்தது.
போங்கிற்கு முதலில் ஓராண்டு எட்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரது சிறைத் தண்டனையை எட்டு மாதத்துக்கு மேல்முறையீடு நீதிமன்றம் நேற்று குறைத்தது.
மியன்மாரைச் சேர்ந்த திருவாட்டி தான் தான் சோவை அடித்துத் துன்புறுத்தியதற்காக போங்கிற்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
போங்கிடம் வேலைக்குச் சேர்ந்தபோது திருவாட்டி தான் தான் சோவுக்கு நல்ல கண்பார்வை இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
தலைவலிக்காக திருவாட்டி தான் தான் சோ பயன்படுத்திய தைலத்தின் வாடை பிடிக்காததால் தைலப் புட்டியைக் கொண்டு அவரது கன்னத்தை மூன்று முறை அடித்ததாகக் கடந்த ஆண்டு நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது தெரிவிக்கப்பட்து.
அதுமட்டுமல்லாமல், திருவாட்டி தான் தான் சோவின் கண்களில் போங் அடிக்கடி குத்தியதாகவும் கூறப்பட்டது.
ஆனால் திருவாட்டி தான் தான் சோ கண்பார்வை இழந்ததற்கும் போங்கின் செயல்களுக்கும் தொடர்பு இல்லை என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.