ஒன்பது மாதக் குழந்தையின் தலையை வேன் ஒன்றின் தளத்தின் மீது மோதியதாக 27 வயது முகமது ஆலிஃப் முகமது யூசுஃப் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அந்த ஆண் குழந்தை இறந்துபோனது. வேண்டுமென்றே கடுமையான காயம் விளைவித்ததாக யூசுஃப் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஈசூன் ஸ்திரீட் 81, புளோக் 840Aல் உள்ள பலமாடி கார் நிறுத்துமிடத்தில் கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 7) இரவு 10 மணிக்கும் நள்ளிரவு 12.15 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்தக் குற்றச்செயலை அவர் புரிந்ததாகக் கூறப்பட்டது.
இஸ் ஃபயாஸ் ஸயானி அஹமது என்ற அந்தக் குழந்தைக்கும் யூசுஃபுக்கும் இடையிலான உறவுமுறை பற்றி ஆவணங்களில் ஏதும் குறிப்பிடப்படவில்லை. குழந்தையின் தாயின் ஆண் நண்பர் யூசுஃப் என்று சீன நாளிதழ் குறிப்பிட்டிருந்தது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் யூசுஃபுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity