எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்திற்கும் தேசிய போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்திற்கும் இடையிலான பல்வேறு கூட்டு உடன்பாடுகளில் காணப்படும் விதிகள் வேலைவாய்ப்புச் சட்டத்தை மீறியதாக இல்லை என்று தொழிலகச் சமரச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், குழப்பத்தைத் தவிர்க்கும் வகையில் மொழிப் பயன்பாடு தெளிவாக இருந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது.
எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் மீது, அதன் பேருந்து ஓட்டுநர்கள் ஐவர் தனித்தனியாக அரசாங்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். அவர்களது கோரிக்கைகளை நீதிமன்றம் செவிமடுக்கவில்லை.மனிதவள அமைச்சு குறிப்பிட்டுள்ள விகிதத்தைவிடக் குறைவாகவே தங்களுக்கு மிகைநேர ஊதியம் வழங்கப்பட்டது என்றும் தங்களது வேலை நேரப் பதிவுகளும் மாதாந்திரச் சம்பளச் சீட்டும் பொருந்தவில்லை என்றும் அவர்கள் கோரியிருந்தனர்.
எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் தாக்கல் செய்த மாதிரி வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள், மாதிரி பணிமுறைப் பட்டியல்கள், சம்பளக் கணக்கீடுகள் ஆகியவற்றைப் பார்க்கும்போது, கூட்டு உடன்பாடுகள் இணக்கமானதாகவே உள்ளன என்று தொழிலகச் சமரச நீதிமன்றத்தின் தலைவர் சான் செங் ஓன் தெரிவித்துள்ளார். அத்துடன், ஓய்வு நாட்கள் தொடர்பான விதிகளும் வேலைவாய்ப்புச் சட்டத்தை மீறுவதாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயினும், வாரத்திற்கு நான்கு மணி நேரம் கட்டாயமாக மிகை நேரப் பணி ஆற்றவேண்டும் என தனது வேலை ஒப்பந்தங்களில் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் குறிப்பிட்டு வருவது, வேலைவாய்ப்புச் சட்டத்தில் கூறப்பட்டிருப்பதற்கு முரணாக உள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.