சிங்கப்பூர் டிபிஎஸ் வங்கியின் ஹாங்காங் கிளை தீ விபத்தால் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தீப்பற்றி எரிவதைக் காட்டும் காணொளிகள் இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து அது குறித்த தகவல்களை டிபிஎஸ் பேச்சாளர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.
“ஹாங்காங் டிபிஎஸ் வங்கிக்கு அருகில் உள்ள கட்டடத்தில்தான் தீப்பற்றியது. நல்லவேளையாக வங்கி பாதிக்கப்படவில்லை,” என்றார் அவர்.
கட்டடத்திற்கு ஒரு சேதமும் இல்லை என்றும் ஊழியர்கள் அத்தனை பேரும் பத்திரமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
தீச்சம்பவத்தைக் காட்டும் காணொளிகள் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டன. அதில் டிபிஎஸ் வங்கி பாதிக்கப்பட்டதுபோல பலரும் கருதினர்.
டிபிஎஸ் வங்கிக்கு அடுத்துள்ள கட்டடத்தில் தீ மளமளவென எரிவதும் அந்தக் கட்டடத்தின் முன்பு ஏராளமானோர் திரண்டிருப்பதும் காணொளியில் தெரிந்தன.
தீயணைப்பு வாகனம் வந்து சேருவதும் ஆடவர் ஒருவர் வாளி தண்ணீரால் தீயை அணைக்க முயன்றதும் அதில் தெரிந்தன.
ஹாங்காங்கில் பல மாதங்களாக நடைபெற்று வரும் வன்முறைக்கு இடையே இந்த காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன.