பாடகர் அலிஃப் அசிஸை போலிசார் மடக்கிப்பிடித்து கைது செய்யப்பட்ட விவகாரம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்களை அது கிளப்பியுள்ளது.
குறிப்பாக, போலிஸ் அதிகாரிகள் அவரைக் கைது செய்ய முயன்றபோது தமது கைபேசியில் அவர் தந்தையிடம் உதவி கேட்டது குறித்து பலர் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
அலிஃப்புக்கு 28 வயதாகிறது. இந்த வயதில் தந்தையை அழைத்து உதவி கேட்க வேண்டுமா என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆனால் தந்தையிடம் உதவி கேட்டதை பாடகர் அலிஃப் தற்காத்து பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட காணொளியில் நாற்பது வயதா அல்லது ஐம்பது வயதா என்பது முக்கியமல்ல, நெருக்கடி சமயத்தில் குடும்பத்தினரிடம் உதவி கேட்பது முறையானதுதான் என்று கூறியுள்ளார்.
தமக்கு எதிரான விமர்சனங்களைப் புறந்தள்ளிய அவர், 2019ஆம் ஆண்டு தமக்கு சிரமமான ஆண்டு என்பதை ஒப்புக் கொண்டார்.
“இன்னும் வலிமையுடன் திரும்பி வருவேன்,” என்று அலிஃப் காணொளியில் சொன்னார்.
ஒரு ஹோட்டல் அறையில் இந்தோனீசிய நடிகையின் பொருட்களை திருடியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிளாசா சிங்கப்பூராவில் உள்ள ஸ்டார்பக்ஸ் கடையில் அவர் சிகரெட் லைட்டரை திருடியதாகவும் கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு அவருக்கும் அவரது மனைவியான மலேசிய நடிகை பெல்லா அஸ்டில்லாவுக்கும் இடையே மணமுறிவு ஏற்பட்டது.
அலிஃபுக்கு மூன்று வயதில் மகன் இருக்கிறான்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்ச்சர்ட் ரோட்டில் விடியற்காலை 6.40 மணியளவில் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அலிஃபை போலிசார் தரையில் அழுத்தி மடக்கிப் பிடித்தனர். அப்போது அவர் தமது கைபேசியில் தந்தையிடம் உதவி கேட்டு அலறுவதை காணொளியில் பார்க்க முடிகிறது. இந்த விவகாரம்தான் தற்போது சமூக ஊடகங்கள் சூடான விவாதத்தைக் கிளப்பியுள்ளன.