சிங்கப்பூருக்கு கடந்த வாரம் வருகையளித்த புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி, புதுவையில் முதலீடு செய்ய சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
“வார இறுதி பொழுதுபோக்குக்கு புதுச்சேரி சிறந்த இடம்,” என்று தப்லா வார இதழுக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.
“புதுச்சேரியில் தங்கும் இடம், உணவு, மதுபானம் மலிவாகக் கிடைக்கும். ஆனால் பொழுதுபோக்குத் தளங்கள் இல்லை,” என்று கூறிய அவர், “அதிவேகத்தில் வளர்ச்சியடையும் புதுச்சேரியின் சுற்றுலா துறையில் முதலீடு செய்ய சிங்கப்பூர் தொழில்முனைவர்கள் முன்வரவேண்டும்,” என்றார்.
“புதுவையில் உள்ள 1,700க்கும் மேற்பட்ட உணவகங்களில் பல தரப்பட்ட உணவு வகைகள் பரிமாறப் படுகின்றன. இருப்பினும் இவற்றுக்கு இடையே வாய்ப்புகளும் உள்ளன,” என்றார் திரு நாரயணசாமி.
“ஏராளமான ஹோட்டல் அறைகள் தேவைப்படுகின்றன. சுற்றுலா பயணிகள் பொழுதுபோக்குவதற்கான வசதிகள் தேவைப்படுகின்றன. கடற்கரையையொட்டி ஏராளமான நிலப்பகுதிகள் இருப்பதால் அவற்றை நீர் விளையாட்டுகள், வான்குடையில் பறப்பது, டிஸ்னிலாண்ட் போன்ற கேளிக்கை பூங்கா, சூதாட்ட வளாகம் போன்றவற்றுக்குப் பயன்படுத்தலாம்,” என்று முதல்வர் சுட்டிக்காட்டினார்.
சிங்கப்பூர் நிறுவனமான ‘ஃபாம்போசோ குளோபல்’ என்ற நிறுவனத்தின் ஏற்பாட்டில் சிங்கப்பூர் முதலீட்டாளர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார்.
அப்போது தமது அரசாங்கம் வழங்கும் ஆதரவுகளை அவர் பட்டியலிட்டார்.
“எங்களிடம் கனிமவளங்கள் இல்லை. ஆனால் ஏராளமான நிலங்கள் இருக்கின்றன. ஏராளமான மின்சாரமும் தண்ணீரும் உள்ளது. புதுச்சேரிக்கு சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு ஏற்ற இடம்,” என்று திரு நாரயணசாமி தெரிவித் தார். சிங்கப்பூைரத் தளமாகக் கொண்ட மெய்ன்ஹார்ட், சர்பானா ஜூரோங் ஆகியவை புதுச்சேரியில் சுற்றுலா தொடர்பான ேமம்பாடு, விமான நிலையம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த நிலையில் புதுவை முதல்வரின் அணுகுமுறையால் ஈர்க்கப்பட்டதாகக் கூறிய தொழில்முனைவரான சிவசங்கரன் பாலசுப்ரமணியம், புதுவையில் விளையாட்டு நிலையத்தையும் ஐடி நிறுவனத்தையும் தொடங்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
பெரிய மாநிலங்களைவிட புதுச்சேரியில் அரசாங்கத்துடன் தொடர்பு கொள்வது எளிது என்றார் அவர்.
முன்னாள் பிரெஞ்சு காலனியான புதுவையில் உள்ள அரவிந்தோ ஆஸ்ரமம், அழகிய கடற்கரை போன்றவை 2017ல் 1.51 உள்ளூர் பயணிகளையும் 1.31 வெளிநாட்டுப் பயணிகளையும் ஈர்த்துள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு முறையே 1.61 மில்லியனாகவும் 1.41 மில்லியனாகவும் அதிகரித்தது. புதுவைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.