தனது தாதிகள் இருவர் விலங்குகளிடம் முறையற்ற வகையில் நடந்துகொண்ட காணொளி இணையத்தில் பரவியதை அடுத்து, பாசிர் ரிஸில் உள்ள விலங்கு மருந்தகம் அந்தத் தாதியரைத் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது. தனது ஊழியர்களின் செயல்களுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்ட ‘ஒஹானா வெட்கேர்’ எனும் அந்த மருந்தகம், இச்சம்பவம் தொடர்பில் முழு விசாரணை நடத்திய பிறகு அடுத்தக் கட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுக்கப்படும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.
அந்தக் காணொளியில் காணப் பட்ட செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களைத் தொடர்பு கொண்டு இச்சம்பவம் குறித்த முழு விளக்கத்தை அளிக்கவுள்ளதாகவும் ஒஹானா வெட்கேர் கூறியது. வெவ்வேறு சம்பவங்களைத் தொகுத்து வெளியிடப்பட்ட காணொளியை காக்கிஸ் கிளப் ஃபேஸ்புக் பக்கம் பகிர்ந்துகொண் டது.
காணொளியின் ஒரு பகுதியில் ஒருவர் கண்ணீர் துளி வடிவத்திலான பொருட்களைத் தரையில் வீசுகிறார். அடுத்தப் பகுதியில் மற்றொருவர் அதே போன்ற செயலைச் செய்கிறார். அடுத்தப் பகுதியில், தனது காதுகளை அறுவை சிகிச்சை மூலம் இழந்த ஒரு பூனைக்குப் பின்னால் அவர் கைகளைத் தட்டி ஓசை எழுப்புகிறார்.
இச்செயல்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்த இணையவாசிகள் வாயில்லா பிராணிகளிடம் ஊழியர்கள் ஈவிரக்கமின்றி நடந்துகொண்டதாகக் கூறினர்.