சிங்கப்பூரர்களின் தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இவ்வாண்டு வரவு செலவுத் (பட்ஜெட்) திட்டத்தில் மொத்தம் $15.3 மில்லியன் தொகை சிறப்பு பரிமாற்ற நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தகைய நிதி அறக்கட்டளை நிதித் திட்டங்களுக்குப் பணம் நிரப்பும் நிதியாகப் பயன்படுத்தப்படும். அரசாங்கத்தின் செலவைப் பரிசோதிக்க நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சிறப்புக் குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தொகை பற்றிய விவரம் இருந்தது.
வெவ்வேறு தலைமுறை சிங்கப்பூரர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இத்தகைய நிதி பரிமாற்றத்தின் நிலைத்தன்மையை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று சிறப்புக் குழு கேட்டுக் கொண்டது.
ஒதுக்கப்பட்ட $15.3 பில்லியன் தொகையில் $6.1 பில்லியன் மெர்டேக்கா தலைமுறை நிதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 1950ஆம் ஆண்டு முதல் 1959ஆம் ஆண்டு வரை பிறந்த சிங்கப்பூரர்களின் நிதி மற்றும் இதர ஆதரவுத் திட்டங்களுக்கு இந்தத் தொகை பயன்படுத்தப்படும். நீண்டகால பராமரிப்பு ஆதரவு நிதிக்கு $5.08 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கேர்ஷீல்டு லைஃப் கட்டணக் கழிவுகள், எல்டர்ஃபண்டு உதவித் திட்டம் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படும். எஞ்சிய தொகை, வர்த்தகங்களுக்கும் ஒருமுறை வழங்கப்படும் எஸ்ஜி போனஸ் பெறும் குடும்பங்களுக்கும் சென்றது.
எட்டு பேர் கொண்ட மதிப்பீட்டுக் குழு தனது 55 பக்க அறிக்கையில் இந்தத் தகவல்களை வெளியிட்டது. நாடாளுமன்றத்தால் உருவாக் கப்பட்ட இந்தக் குழு அரசாங்கத்தின் பட்ஜெட் அறிக்கையைக் கவனமாகப் பரிசீலித்து அதிலிருந்து சேமிப்புகள் எதுவும் மேற்கொள்ளப்பட வேண்டுமா என்பது பற்றி தெரிவிக்கும்.
இந்த மதிப்பீடுகள் குழுவுக்கு வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபூ மீ ஹார் தலைமை தாங்குகிறார்.