தாய்லாந்திலிருந்து வியட்னாமுக்குச் சென்றுகொண்டிருந்த சொகுசு கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்த பயணிகளுக்கும் சிப்பந்திகளுக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் அக்கப்பல் சிங்கப்பூரில் நங்கூரமிட்டுள்ளது.
கப்பலில் உள்ள பயணிகளில் 229 பேர் நோய்வாய்ப்பட்டிருந்தனர்.
இந்தத் தகவல்களை சிங்கப்பூர் கடற்துறை, துறைமுக ஆணையம், சுகாதார அமைச்சு, சிங்கப்பூர் உணவு முகவை ஆகியவை அறிக்கை மூலம் வெளியிட்டன.
தாய்லாந்தின் புக்கெட்டிலிருந்து வியட்னாமின் ஹோ சி மின் நகருக்குச் சென்றுகொண்டிருந்த எம்வி சன் பிரின்செஸ் சொகுசு கப்பல் கடந்த புதன்கிழமை அதிகாலை 5.30 மணி அளவில் சிங்கப்பூரில் நங்கூரமிட்டது.
நோயால் பாதிக்கப்பட்டிருந்த பயணிகளில் 189 பேர் குணமடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய்வாய்ப்பட்டிருப்போரில் 16 பேர் சிங்கப்பூரில் தரையிறங்கி தங்கள் கப்பல் பயணத்தை முடித்துக்கொண்டனர்.
பயணிகள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவர்களை சிங்கப்பூரில் இறக்கிவிடவில்லை என்றும் குணமடைந்த பயணிகளில் பலர் சிங்கப்பூரில் ஒரு நாள் சுற்றுலா மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.