மானபங்கத்துக்கு எதிரான பதாகையால் சர்ச்சை ஏற்பட்டதை அடுத்து வெளியிடப்பட்ட பதாகைகளைத் தற்காத்து சிங்கப்பூர் போலிஸ் படை பேசியுள்ளது. பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பு எங்கும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அந்தப் பதாகைகளில் ஆடவர் ஒருவர் பெண்ணை மானபங்கம் செய்ய இருப்பது போன்ற படம் உள்ளது. பதாகையில், “இரண்டு ஆண்டு சிறை உண்டு: அதனால் எந்த ஒரு பலனும் இல்லை,” என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. இந்த வாசகத்துக்கு பெண்களுக்கான செயல், ஆய்வுச் சங்கம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பதாகையில் உள்ள வாசகம் தண்டனையில் மட்டும் கவனம் செலுத்துவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் படும் வேதனை பற்றி கவலைப்படவில்லை என்றும் சங்கம் சாடியது. இதற்கு நேற்று முன்தினம் பதிலளித்த சிங்கப்பூர் போலிஸ் படை, பதாகையில் உள்ள வாசகத்தை சங்கம் தவறாகப் புரிந்துகொண்டதாகக் கூறியது.
“சுய கட்டுப்பாடு இல்லாமல் குற்றம் புரிய இருப்போரைத் தடுக்க பதாகைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன,” என்று போலிஸ் படையின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். மானங்கக் குற்றம் புரிந்தால் என்ன தண்டனை கிடைக்கும் என்பதை பதாகை வலியுறுத்துவதாக அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட பெண்கள் படும் வேதனையை போலிஸ் படை நன்கு உணர்வதாக போலிஸ் படை செய்தித்தொடர்பாளர் கூறினார். “கடுமையான பரிசீலனைக்குப் பிறகே எங்கள் குற்றத்தடுப்பு வாசகங்கள் வெளியிடப்படுகின்றன. எங்கள் கோணத்திலிருந்து பார்க்காமல் எங்களுக்கு எதிராக சங்கம் கருத்து தெரிவித்திருப்பது வேதனைக்குரியது,” என போலிஸ் படை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.