2008ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் ‘மீண்டும் பள்ளிக்குச் செல்வோம்’ விழாவுக்கு சிண்டா ஏற்பாடு செய்து வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் இவ்வாண்டு 3,500 வசதி குறைந்த மாணவர்களுக்கு பள்ளிக்குச் சென்று கல்வி பயில்வதற்குத் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த விழா தொடங்கியதிலிருந்து இந்த ஆண்டில்தான் ஆக அதிகமான மாணவர்களுக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது. பள்ளியில் படிக்க தேவையான பொருட்களை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.
2016ஆம் ஆண்டில் 1,200 மாணவர்களும் 2017ஆம் ஆண்டில் 2,000 மாணவர்களும் கடந்த ஆண்டு 2,500 மாணவர்களும் இந்தத் திட்டத்தால் பலனடைந்தனர். புதிய கல்வி ஆண்டில் நன்கு படித்துத் தேர்ச்சி பெற மாணவர்களை ஊக்குவிக்கவும் புதிய கல்வி ஆண்டுக்குத் தயாராகும் வசதி குறைந்த குடும்பங்களின் நிதிச் சுமையைக் குறைக்கவும் நிதிப் பற்றாக்குறை வசதி குறைந்த குடும்பங்களிலிருந்து வரும் பிள்ளைகளுக்குக் கல்வி ஓர் எட்டாக் கனியாகிவிடக்கூடாது என்பதும் விழாவின் நோக்கமாகும்.
தனிநபர் வருமானம் $1,000க்கும் குறைவாகக் கொண்டுள்ள குடும்பங்களிலிருந்து வரும் பிள்ளைகள் இந்தத் திட்டம் மூலம் பற்றுச்சீட்டுகளைப் பெற தகுதி பெறுகின்றனர். ஒவ்வொரு மாணவருக்கும் எழுதுபொருட்கள், காலணிகள் வாங்க பற்றுச்சீட்டுகள் அடங்கிய பள்ளிச் சாதனப் பைகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளிச் சாதனப் பையும் $180 மதிக்கத்தக்கது. நேற்று முன்தினம் நடைபெற்ற இவ்வாண்டின் ‘மீண்டும் பள்ளிக்குச் செல்வோம்’ விழாவில் பிரதமர் அலுவலக அமைச்சரும் சிண்டாவின் தலைவருமான இந்திராணி ராஜா உரையாற்றினார்.
இத்தகைய திட்டங்கள் வசதி குறைந்த பிள்ளைகளுக்கு உதவுவதுடன் சிங்கப்பூர் மக்களை வலுப்படுத்தி அனைவரையும் நெருக்கமாக்குகிறது என்று அவர் கூறினார். சிங்கப்பூரின் வளர்ச்சியில் ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் முக்கிய பங்கு இருப்பதே இத்தகைய திட்டங்களில் நோக்கம் என்றார் குமாரி இந்திராணி ராஜா.