கட்டுமானத் தளம் ஒன்றில் மண்ணைத் தோண்டிக்கொண்டிருந்தபோது இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட 50 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதாக போலிசார் நேற்று முன்தினம் தெரிவித்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று கிம் செங் சாலை அருகில் உள்ள ஜியாக் கிம் ஸ்திரீட்டில் உள்ள கட்டுமானத் தளத்தில் போர்க்கால வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது குறித்து பிற்பகல் 2.35 மணி அளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக போலிசார் கூறினர். அந்தக் கட்டுமானத் தளத்துக்கு விரைந்த அதிகாரிகள் வெடிகுண்டைச் சோதனையிட்டனர். வெடிகுண்டை அங்கிருந்து அப்புறப்படுத்துவது ஆபத்தான காரியம் என்று முடிவெடித்த வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு அதை அந்தக் கட்டுமானத் தளத்திலேயே செயலிழக்கச் செய்ய தீர்மானித்துள்ளனர்.
இந்நிலையில், கண்டெடுக்கப்பட்ட போர்க்கால வெடிகுண்டு இன்று காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணிக்குள் அந்தக் கட்டுமானத் தளத்தில் செயலிழக்கப்படும். பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அந்தக் கட்டுமானத் தளத்திலிருந்து 200 மீட்டர் தூரத்தில் தடுப்பு வைக்கப்படும்.
வெடிகுண்டு செயலிழக்கப்படும்போது மிராஜ் டவர், டிரிபேக்கா பை தி வாட்டர்ஃபிரண்ட், ரிவர்கேட் ஆகிய கொண்டோமினியங்களின் குடியிருப்பாளர்கள் தற்காலிகமாக வெளியேற்றப்படுவர். கிராண்ட் கோப்தோர்ன் வாட்டர்ஃபிரண்ட் ஹோட்டலில் தங்கியிருப்போர் வேறோர் இடத்தில் தங்க ஏற்பாடுகள் செய்யப்படும். இன்று காலை 9.30 மணியிலிருந்து சில சாலைகளும் சிங்கப்பூர் ஆற்றின் ஒரு பகுதியும் மூடப்படும். மூடப்படும் சாலைகளில் போலிஸ், சிங்கப்பூர் ஆயுதப் படை, அவசரகால வாகனங்கள் மட்டும் செல்ல முடியும். வெடிகுண்டு செயலிழக்கப்படும் இடத்துக்கு அருகில் உள்ள வட்டாரங்களில் வாகனங்களை நிறுத்தி வைக்கக்கூடாது. மீறி நிறுத்திவைக்கப்படும் வாகனங்கள் அங்கிருந்து கொண்டு செல்லப்படும்.அந்த வட்டாரத்தில் ஆளில்லா வானூர்திகளைப் பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.