சிங்கப்பூரில் தொழில்நுட்பம் தொடர்பான பல்கலைக்கழகப் பட்டதாரிகளின் எண்ணிக்கை 2022ல் மூன்றில் இரண்டு பங்கு கூடும் என்று தெரிகிறது.
அந்தத் தொழில்துறையில் நிலவக்கூடிய ஊழியர்களின் தேவையை ஏறக்குறைய ஈடுசெய்யும் அளவுக்கு உள்நாட்டு பட்டதாரிகளின் எண்ணிக்கை இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
சிங்கப்பூரில் உள்ள ஆறு தன்னாட்சி உரிமை பெற்ற பல்கலைக்கழகங்கள் தகவல் தொடர்பு மற்றும் மின்னிலக்கத் தொழில்நுட்பப் படிப்புகளில் சேர்த்துக்கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 2015ல் 1,250. இது சென்ற ஆண்டில் 2,050 ஆகக் கூடியது.
கல்வி அமைச்சின் புதிய புள்ளிவிவரங்கள் மூலம் இந்த நிலவரங்கள் தெரியவருகின்றன.
இங்குள்ள ஐந்து பலதுறை தொழிற்கல்லூரிகளில் இத்தகைய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 2015 முதல் ஆண்டுக்கு 3,000 பேராக இருந்து வந்துள்ளது.
சிங்கப்பூர் அறிவார்ந்த நகர் இலக்கை நிறைவேற்றும் முயற்சிகளைப் பெரிய அளவில் தொடங்கி இருக்கிறது. அதற்கு இத்தகைய ஆற்றல்மிக்க பட்டதாரிகள் அதிகம் தேவைப்படுகிறார்கள்.
கணினித் தகவல் பகுப்பாய்வு வல்லுநர்கள், மனித இயந்திர சிறப்பு வல்லுநர்கள் போன்ற வேலைகளுக்கு ஆட்களைச் சேர்க்க நிறுவனங்கள் முயற்சிகளை முடுக்கிவிடுகின்றன. தேவைகளுக்கு ஏற்ப சம்பளமும் கூடி இருக்கிறது.
கடந்த மூன்றாண்டுகளில் தகவல் தொழில்நுட்பத் துறை பட்டதாரிகளே ஆக அதிக சம்பளம் ஈட்டியவர்களாக இருந்து வருகிறார்கள் என்பது பல்கலைக்கழகங்கள் நடத்திய கூட்டு ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
அவர்களின் சராசரி மொத்த மாதச் சம்பளம் 2016ல் $3,788 ஆக இருந்தது. சென்ற ஆண்டில் அது $4,100 ஆகக் கூடியது. பொறியியல், வணிகம் படித்த பட்டதாரிகள் ஈட்டியதைவிட தகவல் தொழில்நுட்பத் துறை பட்டதாரிகள் அதிக ஊதியம் சம்பாதித்தனர்.
உள்ளூர் தொழில்நுட்பப் பட்ட தாரி ஊழியர்களுக்கான தேவை, அத்தகைய பட்டம் படித்து வெளிவரும் மாணவர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்கிறது என்று சிங்கப்பூர் பலதுறை தொழிற்கல்லூரி விரிவுரையாளர் டோரா சுவா தெரிவித்து இருக்கிறார்.