தன்னுடைய இளைய உடன் பிறப்புகளுக்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த பால் மாவைத் திறந்த ‘களவாடலுக்கு’ பாடம் புகட்ட எண்ணி ஐந்து வயது சிறுவனின் கையில் சூடான கரண்டியால் ‘சூடு’ போட்டதாக தந்தை நேற்று (நவம்பர் 18) நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
மனைவியுடனான சிறு கருத்து வேறுபாடுகளுக்குக்கூட அவரை அடிக்கும் பழக்கம் கொண்ட ரிட்ஸுவான் மேகா அப்துல் ரஹ்மான், அந்தப் பழக்கத்தை மாற்றுவதற்காக கோபத்தை சிறுவன் மீது திருப்பியதாக தடயவியல் மனநோய் நிபுணரான மருத்துவர் சியோவ் எங்குவானிடம் தெரிவித்தார்.
ஆனால், ‘ஐஇடி’ எனப்படும் இடையிடையே கோபத்தால் வெடிக்கும் பிறழ்ச்சி நிலையால் ரிட்ஸுவான் பாதிக்கப்படவில்லை என்று நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையான மருத்துவர் சியோவ் குறிப்பிட்டார்.
ரிட்ஸுவான் ‘ஐஇடி’ உட்பட மூன்று விதமான மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரது தரப்பு வழக்கறிஞர்கள் அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தனர்.
ஆனால், ரிட்ஸுவானின் ஆத்திரம் ‘ஐஇடி’யால் பாதிக்கப்பட்டவர்களின் பொதுவான நடவடிக்கையைப் போலல்லாமல், “கணிக்கப்பட்ட, குறிக்கோளை அடையும் நோக்கிலான தொடர்ந்து அதிகரித்த வன்முறை,” ஆக இருந்தது என்றார் மருத்துவர் சியோவ்.
சிறுவனை முதலில் கைகளால் அடிக்கத் தொடங்கிய ரிட்ஸுவான், சிறுவனின் நடவடிக்கையில் மாற்றம் தெரியாததையடுத்து கடுமையான தண்டனைகளை கொடுக்கத் தொடங்கினார். அவர், துணி காய வைக்கும் கம்பியால், பிறகு இடுக்கியால் பையனைக் கொடுமைப்படுத்தினார்.
‘ஐஇடி’யால் ரிட்ஸுவான் பாதிக்கப்பட்டிருந்தால் மற்ற பிள்ளைகள் மீதும் கோபமாக நடந்துகொண்டிருக்க வேண்டும் என்றார் மருத்துவர் சியோவ்.
ரிட்ஸுவான் சமூகத்துக்கு எதிரான மனநிலைகொண்டவராக இருந்திருக்கலாம் என்று மருத்துவர் குறிப்பிட்டார்.
தொடக்கப்பள்ளி ஐந்தாம் வகுப்பு பயில்கையில் பள்ளிக்குச் செல்வதை நிறுத்தியது, மது அருந்துதல், போதைப்பொருள் முகர்தல், சிங்கப்பூர் சிறுவர் பள்ளிக்கு அனுப்பப்பட்டது, கும்பலில் சேர்ந்தது, அடிதடியில் இறங்கியது போன்ற நடவடிக்கைகளில் 15 வயதுக்கு முன்பாகவே ரிட்ஸுவான் ஈடுபட்டதும் தற்காப்பு வழக்கறிஞர் மூலம் மருத்துவருக்குத் தெரிவிக்கபப்ட்டது.
2016 அக்டோபர் மாதம் பிற்பகுதியில் அந்தச் சிறுவன் மரணம் அடைந்தான். அதற்கு முந்தைய ஒரு வார காலத்தில் அவன் மீது நான்கு தடவை வெந்நீர் ஊற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
உடலில் 70 விழுக்காடு தீப்புண்ணுடன் இருந்த அந்தச் சிறுவனின் ஒரு கை முற்றிலும் வெந்துவிட்டதாக நீதிமன்றத்தில் முன்பு தெரிவிக்கப்பட்டது.
2016 அக்டோபர் 22ஆம் தேதி பையனின் முதுகிலும் கணுக்காலிலும் வெந்நீரை தந்தை ஊற்றினார் என்றும் அதற்குப் பிறகு பையன் மயங்கி விழுந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அதற்குப் பல மணி நேரம் கழித்துதான் பையன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். அடுத்த நாளன்று அந்தச் சிறுவன் மாண்டுவிட்டான்.
சிறுவனின் பெற்றோர் ஒன்றாகச் சேர்ந்து போதைப்பொருள்களைப் புழங்கி இருக்கிறார்கள் என்றும் பல பிரச்சினைகள் தொடர்பில் அடிக்கடி இருவருக்கும் இடையில் சச்சரவு மூண்டு இருக்கிறது என்றெல்லாம் நீதிமன்ற விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது.
இறந்துபோன சிறுவனின் தாயின் மனநிலை பற்றி இன்று நீதிமன்றத்தில் மருத்துவ நிபுணர் தெரிவிப்பார் என்று கூறப்பட்டது.