பணிப்பெண்ணை அடித்துத் துன்புறுத்திய 42 வயது ஜெனி சான் யுன் ஹுவிக்கு 15 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் குற்றத்தைப் புரிந்தபோது சானுக்கு மிக மோசமான மனஅழுத்தம் ஏற்பட்டிருந்ததால் கருணையின் அடிப்படையில் தண்டனை குறைக்கப்பட்டிருப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
இருப்பினும், சான் இழைத்த துன்புறுத்தல்களால் இந்தோனீசியப் பணிப்பெண் திருவாட்டி ராசிக்குக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் அதனால் சானுக்குத் தண்டனை கொடுக்காமல் மன்னித்துவிட முடியாது என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
தமது வீட்டில் பல கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி திருவாட்டி ராசி ஒழுங்காக வேலை செய்கிறாரா என்பதை சான் கண்காணித்து வந்தார். போதிய ஓய்வு இல்லாத காரணத்தால் திருவாட்டி ராசி வேலை செய்துகொண்டிருக்கும்போதே தூங்கிவிடுவது வழக்கம். இது சானைச் சினம் அடையச் செய்தது.
ஒருமுறை, திருவாட்டி ராசி வேலையை முடிக்காததைப் பார்த்து கோபமடைந்த சான், அவரது கண்ணில் குத்தினார். சமையலறையின் தரையைத் திருவாட்டி ராசி சுத்தம் செய்துகொண்டிருந்தபோது அவரது முதுகில் சான் அடித்தார். பிறகு பிளாஸ்டிக் கிண்ணத்தைப் பயன்படுத்தி திருவாட்டி ராசியின் தலையில் அடித்தார். அதனால் திருவாட்டி ராசியின் தலையிலிருந்து ரத்தம் கசிந்தது.
இதே போல இன்னொரு சம்பவத்தில் திருவாட்டி ராசி நேரம் கழித்து எழுந்ததால் கோபமடைந்த சான், அவரது மூக்கில் பலமுறை குத்தினார். மூக்கின் வழியாக மூச்சுவிட முடியவில்லை என்று திருவாட்டி ராசி கூறியும் குத்துவதை சான் நிறுத்தவில்லை. இந்தத் தாக்குதலால் திருவாட்டி ராசியின் மூக்கு உடைந்தது.
இவ்விரு சம்பவங்களிலும் அவரை சான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை.
ஒரு கட்டத்தில் சானின் குடும்பத்துக்காக வேலை செய்வதை நிறுத்திக்கொள்ள விரும்புவதாக திருவாட்டி ராசி தெரிவித்தார். வீட்டைவிட்டு ஓடினால் போலிசாரிடம் புகார் அளிக்கப்படும் என்றும் அதன் விளைவாக 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் திருவாட்டி ராசியை சான் மிரட்டினார்.
அதே நாளில் தமது நகங்களால் திருவாட்டி ராசியின் காதுகளை சான் கிள்ளினார். இதனால் திருவாட்டி ராசியின் காதுகளிலிருந்து ரத்தம் கசிந்தது. அதனைத் தொடர்ந்து, திருவாட்டி ராசியின் கண்களில் அவர் பலமுறை குத்தினார். திருவாட்டி ராசியின் இடது கண் வீக்கம் அடைந்ததால் அவரால் கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கு அந்தக் கண்ணால் எதையும் பார்க்க முடியாமல் போனது.
இந்தச் சம்பவம் நிகழ்ந்து மூன்று மாதங்கள் கழித்து, 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் தேதியன்று தமக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்து இன்னொரு பணிப்பெண்ணிடம் திருவாட்டி ராசி மனந்திறந்தார்.
இந்தோனீசியத் தூதரகத்துக்கு சென்று உதவி நாடும்படி அந்தப் பணிப்பெண் திருவாட்டி ராசிக்கு ஆலோசனை வழங்கினார். அந்தப் பணிப்பெண் வழங்கிய ஆலோசனையின்படி மறுநாள் திருவாட்டி ராசி இந்தோனீசியத் தூதரகத்துக்குச் சென்று உதவி நாடினார்.
அவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் ஜூன் மாதம் 22ஆம் தேதி வரை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity