வாடிக்கையாளரின் பானத்தில் கண்ணாடித் துகள்கள் இருந்ததன் தொடர்பில் அதை விற்ற ‘ஸ்லெப்பி கேக்ஸ்’ உணவகம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அன்று உணவகத்திற்குச் சென்ற வாங் குடும்பத்தார், ‘பெர்ரி ஸ்மூதி’ பானம் கேட்டிருந்தனர். பானத்தைக் குடித்த திருவாட்டி வாங், அதில் கண்ணாடித் துகள்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார். ஆனால் அவரின் ஏழு வயது மகன் சிறிதளவு பானத்தைக் குடித்துவிட்டார்.
சில மணி நேரங்களுக்குள் தனக்கு தொண்டையில் வலி ஏற்படுவதாக சிறுவன் கூறியதையடுத்து, பெற்றோர் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டது.
இதுகுறித்து உணவகத்தில் குறிப்பிட்டபோது, முதலில் அதனை உணவகம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று திருவாட்டி வாங் கூறினார்.
இந்தச் சம்பவத்தைக் கடுமையாக எடுத்துக்கொண்டதாகச் சொன்ன உணவகம், சம்பந்தப்பட்ட ஊழியரை வேறு பிரிவுக்கு மாற்றியதாகவும் மற்ற ஊழியர்களுக்கு பயிற்சி அளித்திருப்பதாகவும் குறிப்பிட்டது.
மேலும், 'ஸ்மூதி' பானத்தைத் தயாரித்த பெண், வாங் குடும்பத்தாரிடம் பலமுறை மன்னிப்புக் கோரும் காணொளியையும் அது வெளியிட்டது.
பானத்தைத் தயாரிக்கும் சமயத்தில் உணவக ஊழியர் ஒருவர் கண்ணாடி ஒன்றைத் தவறுதலாக உடைத்துவிட்டார். அவர் உடைந்த துகள்களை அப்புறப்படுத்தியும் சில துகள்கள் பானத்தைத் தயாரிக்கும் இயந்திரத்திற்குள் விழுந்துவிட்டதை உணரவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறப்பட்டது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity