முதிர்ச்சியடைந்த பேட்டைகளான அங் மோ கியோவிலும் தெம்பனிசிலும் பெரிய பிடிஓ வீடுகளுக்கான தேவை மிதமிஞ்சி உள்ளது. நேற்று முன்தினம் முடிவுற்ற விற்பனை நடவடிக்கையில் இந்த நிலவரம் தெரிய வந்தது.
அங் மோ கியோ வீடமைப்புப் பேட்டையில் பெரிய நான்கறை வீடுகளை அதிகம் பேர் நாடியுள்ளனர். அங்கு விற்பனைக்கு விடப்பட்ட 235 நான்கறை வீடு ஒவ்வொன்றுக்கும் தலா 13 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
இவர்கள் அனைவரும் வீடுகளுக்காக முதல் முறை விண்ணப்பித்தவர்கள்.
அதேநேரம் அங் மோ கியோவின் புதிய மூவறை வீடுகளுக்கான தேவை குறைந்திருந்தது. விற்பனைக்கு விடப்பட்ட 87 மூவறை வீடு ஒவ்வொன்றுக்கும் தலா இருவரே விண்ணப்பம் செய்துள்ளனர்.
இதேபோன்ற நிலைமைதான் தெம்பனிசிலும் நிலவியது. அங்கு விற்பனைக்கு விடப்பட்ட 193 ஐந்தறை வீடு ஒவ்வொன்றுக்கும் தலா 11 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. அதேபோன்ற அளவிலான விண்ணப்பங்கள் 218 நான்கறை வீடுகளுக்கும் வந்திருந்தன. அதேநேரம் 90 மூவறை வீடுகளுக்கு தலா மூவரே விண்ணப்பம் செய்திருந்தனர்.
இவை இப்படியிருக்க, முதிர்ச்சியடையாத தெங்கா வீடமைப்புப் பேட்டையில் நிலைமை இதற்கு மாறாக இருந்தது. அங்கு பெரிய வீடுகளுக்கான போட்டி கடுமையாக இல்லை.
ஐந்தறை, நான்கறை வீடுகளோடு மூன்றாம் தலைமுறை வீடு ஒவ்வொன்றுக்கும் தலா இரு விண்ணப்பங்களே வரப்பெற்றன.
மேலும் தெங்காவின் மூவறை வீடுகளுக்கான விண்ணப்ப விகிதம் 0.7 ஆகவே இருந்தது. விண்ணப்பித்த அனைவருக்கும் மூவறை வீடு கிடைப்பதற்கான உத்தரவாதத்திற்குரிய நிலை இது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 12) 4,571 புதிய பிடிஓ வீடுகளுக்கான விற்பனையை அறிவித்தது. இவ்வாண்டின் ஆகப்பெரிய பிடிஓ விற்பனை நடவடிக்கை அது.
வீடுகளின் விலைகளைப் பார்க்கையில் அங் மோ கியோவில் நான்கறை வீட்டுக்கு மானியங்கள் தவிர்த்து $451,000 முதல் தொடங்குகிறது. அதேபோல தெம்பனிசில் ஐந்தறை வீட்டின் விலை மானியங்கள் தவிர்த்து $508,000 முதல் தொடங்குகிறது.
எஞ்சிய வீடுகளின் விற்பனை என்ற பட்டியலின் கீழ் 3,599 வீடுகளும் விற்பனைக்கு விடப்பட்டன.
இவை பீஷான், கிளமெண்டி உள்ளிட்ட 14 முதிர்ச்சியுற்ற நகரங் களையும் புக்கிட் பாஞ்சாங், பொங்கோல் போன்ற முதிர்ச்சியடையாத நகரங்களையும் சேர்ந்தவை.
முதல் முறை வீடு வாங்குபவர்களுக்கு வருமான உச்சவரம்பை உயர்த்தியும் மானியங்களை அதிகரித்தும் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் வெளியிட்ட அறிவிப்புக்குப் பின்னர் இடம்பெற்ற இரண்டாவது விற்பனை நடவடிக்கை இது. தகுதியுள்ளவர்கள் புதிய மேம்படுத்தப்பட்ட மத்திய சேம நிதி வீடமைப்பு மானியமாக $80,000 வரை பெறலாம் என அப் போது அறிவிக்கப்பட்டது. மேலும் மானியம் பெறுவோர் தேர்ந்தெடுக் கும் இடம், வீட்டின் வகை ஆகியவற்றுக்கு இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
வருமான உச்சவரம்பு உயர்த்தப்பட்டதால் அதிகமானவர்கள் புதிய வீடுகளுக்குத் தகுதிபெற்றதாக இஆர்ஏ சொத்து நிறுவன ஆலோசகர் நிக்கலஸ் மேக் கூறினார்.