இரண்டு புதிய நடையர் மேம்பாலங்கள் கட்டப்படுவதன் தொடர்பான பணிகளுக்காக தெம்பனிசின் சில பகுதிகளில் இம்மாத இறுதிவாக்கில் சாலைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தெம்பனிஸ் அவென்யூ 9ன் இரு பகுதிகள் வரும் 26ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையில் அதிகாலை 1.15 மணி முதல் 5 மணி வரை மூடப்பட்டு இருக்கும். தெம்பனிஸ் அவென்யூ 9லிருந்து அவென்யூ 10க்கும் அதேபோல அவென்யூ 10லிருந்து அவென்யூ 9க்கும் செல்லும் வாகனமோட்டிகள் மாற்றுவழிகளைத் தேர்ந்தெடுக்குமாறு வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
சாலைகள் மூடப்பட்டிருப்பினும் அவென்யூ 9ல் உள்ள கனரக வாகன நிறுத்துமிடத்திற்குச் செல்ல இடையூறு இருக்காது என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
பாலங்கள் இரண்டின் கட்டுமானப் பணிகளும் அடுத்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் நிறைவுறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.