கார் மீது மரம் ஒன்று விழுந்ததாக நேற்று மாலை தகவல்கள் வந்தன. கிராண்ட் ஹயாட் சிங்கப்பூர் ஹோட்டலின் முன்புறம் ஸ்காட்ஸ் ரோட்டில் மாலை 3 மணியளவில் சாலையின் நான்கு தடங்களையும் மறித்து மரம் விழுந்து கிடந்ததாகக் கூறப்பட்டது.
மாலை 4 மணியளவில் சம்பவ இடத்திற்கு செய்தியாளர் சென்றபோது இரு தடங்கள் போக்குவரத்துக்குத் திறந்து
விடப்பட்டு இருந்தன. விழுந்த மரத்தைச் சுற்றிலும் தடுப்பு அமைக்கப்பட்டு இருந்தது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரும் போலிசாரும் சம்பவ இடத்தில் காணப்பட்டனர். இருப்பினும் கார் அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்து இருந்தது. மரம் விழுந்ததால் அந்த வெள்ளைநிற காரின் பின்பக்கக் கண்ணாடி உடைந்து சிதறியதாகவும் அவ்வழியாகச் சென்றோரின் உதவியுடன் அரவிந்த் ராமன்லால், 71, என்னும் கார் ஓட்டுநர் காயமின்றி தப்பியதாகவும் தெரிய வந்தது.