புலாவ் தெக்கோங்கில் உள்ள அடிப்படை ராணுப் பயிற்சி முகாமில் தண்ணீர் விநியோகம் வழக்கநிலைக்குத் திரும்பியதாக பொதுப் பயனீட்டுக் கழகம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.
அங்கு குழாய் நீரின் நிறம் கடந்த புதன்கிழமை வழக்கத்துக்கு மாறாக இருந்ததை அடுத்த தண்ணீர் விநியோகம் நிறுத்திவைக்கப்பட்டது.
இந்தப் பிரச்சினையால் தேசிய சேவையாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தற்காப்பு அமைச்சு கூறியது.
தண்ணீர் விநியோகம் நிறுத்திவைக்கப்பட்டபோது முகாமில் இருந்தோருகக்கு தண்ணீர் விநியோகிக்க தற்காலிகக் கொள்கலன்கள் அமைக்கப்பட்டன.
இதையடுத்து, பொது பயனீட்டுக் கழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் புலாவ் தெக்கோங்கில் உள்ள தண்ணீர் கட்டமைப்பைச் சரி செய்தனர்.
இரவு முழுவதும் பணியாற்றிய அதகிகாரிகள் தீவின் பிரதான கொள்கலனில் இருந்த தண்ணீரை வெளியேற்றினர்.
அந்தக் கொள்கலனிலிருந்துதான் முகாமில் உள்ள அனைத்து தண்ணீர் குழாய்களுக்கும் தண்ணீர் செல்கிறது.
அதுமட்டுமல்லாது, சோதனை செய்வதற்காக சிறிதளவு தண்ணீரை அதிகாரிகள் கொண்டு சென்றனர்.
தண்ணீரின் நிறம் மாறியதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படுகிறது.
முகாமில் உள்ள தண்ணீரின் தரத்தை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக கழகம் தெரிவித்தது.
இந்நிலையில், புலாவ் தெக்கோங்கில் உள்ள அடிப்படை ராணுவப் பயிற்சி முகாமில் தண்ணீர் விநியோகம் வழக்கநிலைக்குத் திரும்பியதாக நேற்று இரவு 11 மணிக்கு பொதுப் பயனீட்டுக் கழகம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity