ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டிருப்போருக்கு ஏற்புடைய வட்டாரமாக உட்லண்ட்ஸ் அமைய இருக்கிறது. இதற்கு இளையர்களின் பங்கு மிக முக்கியமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாபக மறதி நோயாளிகளுக்காகப் புதிய நண்பர்கள் செயல்பாட்டுக் குழு அடுத்த மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.
ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்யும் திட்டத்தில் இளையர்களை ஈடுபடுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட உட்லண்ட்ஸ் ஞாபக மறதி நோயாளிகளுக்கு ஏற்புடைய சமூகம் எனும் திட்டத்தின் ஒரு பகுதியாக இது அமைகிறது.
இந்தத் திட்டத்தைத் தழுவும் எட்டாவது வட்டாரமாக உட்லண்ட்ஸ் திகழ்கிறது. ஞாபக மறதி நோயாளிகளுக்கு ஏற்புடைய வட்டாரங்களாக ஈசூனும் பிடோக்கும் ஏற்கெனவே இருந்து வருகின்றன. ஆனால் இளையர்களை மையமாகக் கொண்டுள்ள அணுகுமுறை உட்லண்டசில்தான் முதல்முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
“உட்லண்ட்சில் அமைக்கப்படும் செயல்பாட்டுக் குழுவில் முழுக்க முழுக்க இளம் தொண்டூழியர்களே உள்ளனர். ஞாபக மறதி நோய் முதியோர்களை மட்டும் பாதிக்கும் நோய் அல்ல. எனவே, ஞாபக மறதி நோயால் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்ள இளையர்களை ஈடுபடுத்த விழைகிறோம்,” என்று சுகாதார, உள்துறை அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளரான அம்ரின் அமின் கூறினார்.
கம்போங் அட்மிரல்ட்டியில் தாத்தா, பாட்டியர் தினத்தையொட்டி நேற்று நடைபெற்ற குடும்ப சுகாதார, நல விழாவில் கலந்துகொண்டு திரு அம்ரின் பேசினார்.
முதியோர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இளையர்கள்
புரிந்துகொள்வது முக்கியம் எனக் குறிப்பிட்ட திரு அம்ரின், முதியோருக்கு அவர்கள் உதவிக்கரம் நீட்டுவது முக்கியம் என்று தெரிவித்தார். உட்லண்ட்ஸ் வட்டாரக்
குடியிருப்பாளர்கள் துடிப்புடனும் ஆரோக்கியமாகவும் வாழ உதவி செய்யும் வகையில் விழாவில் நலத்திட்டங்கள், நடவடிக்கைகள், சேவைகள் இடம்பெறற்றிருந்தன.
ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டோருக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்து புதிய செயல்பாட்டுக் குழு இளையர்களுக்கு கற்பிக்கும் என்று செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு அம்ரின் கூறினார்.
“இந்தத் திட்டம் முக்கியமானது என்று நான் நம்புகிறேன். ஏனென்றால், இளையர்களுடன் இருக்க முதியோர் விரும்புகின்றனர். அது. அவர்களுக்கு அவர்களது குழந்தைப் பருவம், இளமைப் பருவம் ஆகியவற்றை நினைவுபடுத்துகிறது. இதனால் அவர்கள் புத்துணர்ச்சி பெறுகின்றனர்,” என்றார் திரு அம்ரின்.
ஞாபக மறதி நோயாளிகளுக்கு ஏற்புடைய வட்டாரத்துக்குள் இருக்கும் குடியிருப்பாளர்கள், வர்த்தகர்கள், மாணவர்கள், உணவு அங்காடி நிலையக் கடைக்காரர்கள் ஆகியோருக்கும் ஞாபக மறதி நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த செயல்பாட்டுக் குழு செயல்படும். அதுமட்டுமல்லாது, விளையாட்டுகள் மற்றும் உடற்பயிற்சி மூலம் செயல்பாட்டுக் குழு முதியோரிடம் நட்புகொள்ளும்.
உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் ஞாபக மறதி நோயாளி காணாமல் போனால் அவரைத் தேடும் பணியில் இக்குழு ஈடுபடும்.
இந்தச் செயல்பாட்டுக் குழுவில் இணைய தமக்கு விருப்பம் இருப்பதாக உட்லட்ண்ஸ் சமூக விளையாட்டு மன்றத்தின் தரைப்பந்து ஆர்வக் குழுவின் மூத்த ஆட்டக்காரரான 25 வயது திரு நித்தியராஜ் தெரிவித்தார்.
ஞாபக மறதி நோய் பற்றி மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தாம் விரும்புவதாக அவர் கூறினார். செயல்பாட்டுக் குழுவைக் கொண்டு ஞாபக மறதி நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது நல்லதொரு அணுகுமுறை என்று குறிப்பிட்ட திரு நித்தியராஜ், பலருக்கு அந்நோய் பற்றி தெரியவில்லை என்று கூறினார்.