தொழில்நுட்பத்தின் உதவியுடன் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் மும்மடங்கு அதிகரித்திருப்பதாக மகளிருக்கான செயல், ஆய்வுச் சங்கம் (அவேர்) தெரிவித்துள்ளது.
குட்டைப் பாவாடைக்குள் படம் எடுத்தல், பெண்களைப் பழிவாங்கும் வகையில் உடையில்லாமல் அவர்கள் எடுத்துக்கொண்ட படங்களையோ அல்லது அவர்கள் பாலுறவில் ஈடுபடுவதைக் காட்டும் காணொளிகளையோ இணையத்தில் பதிவேற்றம் செய்வது ஆகியவை இதில் அடங்கும். இந்தப் படங்களும் காணொளிகளும் அந்தப் பெண்களின் சம்பந்தத்துடனோ அல்லது சம்பந்தம் இல்லாமலோ எடுக்கப்பட்டிருக்கலாம்.
பாதிக்கப்பட்ட பெண்களுடன் நன்கு அறிமுகமானவர்கள், குடும்ப உறுப்பினர்கள், சக ஊழியர்கள் இந்தக் குற்றங்களைப் புரியக்
கூடும் என்றபோதிலும் பெரும் பாலான வழக்குகளில் பெண்
களின் காதலர்களே இத்தகைய குற்றங்களை புரிவதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை 2016ஆம் ஆண்டில் 46ஆக இருந்தது.
2017ஆம் ஆண்டில் 99ஆக உயர்ந்தது. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 124ஆக அதிகரித்தது எனப் பாலியல் ரீதியாக தாக்கப்படுவோருக்கான பராமரிப்பு மையத்தின் பாலினச் சமத்துவக் குழுவின் தலைவர் அனிஷா ஜோசஃப் தெரிவித்தார்.
சமூக ஊடகம், தகவல் தளங்கள், மின்னிலக்க கேமராக்கள், ஆண்-பெண் சந்திப்பு செயலிகள் ஆகிய மின்னிலக்கத் தொடர்பு தொழில்நுட்பங்கள் மூலம் இத்தகைய பாலியல் வன்முறை குற்றங்கள் நிகழ்வதாகக் கூறப்படுகிறது.
அவேரின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் நடைபெற்ற Taking Ctrl, Finding Alt 2019 நிகழ்ச்சியில் 150 பேர் கலந்துகொண்டனர். இதில் பேசிய திருவாட்டி ஜோசஃப், பாலியல் வன்முறைக்குத் தொழில்நுட்பம் காரணமல்ல என்பதைத் தெளிவுபடுத்தினார். மாறாக, அதைப் பயன்படுத்தி பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நடத்தப்படுவதாக அவர் கூறினார்.
மகளிருக்கு எதிரான வன்முறைகளை களையும் அனைத்துலகத் தினம், அவேரின் பாலியல் வன்முறைக்கு எதிரான இயக்கத்தின் ஓராண்டு நிறைவு ஆகியவற்றை முன்னிட்டு நேற்று முன்தினம் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்து அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் குமாரி மோனிக்கா பே, ஃபேஸ்புக் APAC பாதுகாப்புக் கொள்கையின் தலைவர் திருவாட்டி ஏம்பர் ஹாக்ஸ், குடும்ப வன்முறை தடுப்பு மன்றத்தின் தலைவர் திரு பெனி போங், பாலியல் ரீதியாக தாக்கப்படுவோருக்கான பராமரிப்பு மையத்தின் தொண்டூழிய வழக்கறிஞர் திருவாட்டி பிரிஸ்சில்லியா சான் ஆகியோர் கலந்துரையாடல் குழுவில் இடம்பெற்றனர்.