திடீரெனப் பொழிந்த ‘4D லாட்டரிச் சீட்டு மழை’ லெங்கோக் பாரு குடியிருப்பாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான சீட்டுகள் பறந்து, சிதறிக்கிடந்தன.
லெங்கோக் பாருவின் புளோக் 63Aல் நிகழ்ந்த வழக்கத்துக்கு மாறான இந்தச் சம்பவம் பற்றி ‘ஸ்டோம்ப்’ வாசகர் ஜெரால்ட் தகவல் அளித்தார்.
நேற்று (நவம்பர் 26) மாலை ஆறு மணியளவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது பொழிந்துகொண்டிருந்த ‘4D லாட்டரிச் சீட்டு மழை’யைக் கண்டதாக அவர் குறிப்பிட்டார். அந்தப் பகுதிவாசிகள் பலர் புகைப்படங்களாகவும் காணொளிகளாகவும் அந்தச் சம்பவத்தைப் பதிவுசெய்தனர்.
அந்த புளோக்கில் இப்படி லாட்டரிச்சீட்டு மழை பொழிவது புதிதல்ல என்றும் பல ஆண்டுகளாக அது தொடர்கிறது என்றும் கூறினார் ஜெரால்ட்.
ஆனால், நேற்று நடந்தது மிகவும் கடுமையானது என்று குறிப்பிட்ட அவர், நூற்றுக்கணக்கான சீட்டுகள் காற்றில் பறந்தன என்றார்.
அவற்றில் ஒரு சீட்டை எடுத்துப் பார்த்ததாகக் குறிப்பிட்ட ஜெரால்ட், அது கடந்த ஜூலை மாதத்துக்குரியது என்றார்.
முன்பெல்லாம் வாரந்தோறும் லாட்டரிச் சீட்டுக் குப்பைகள் சிதறிக்கிடக்கும் என்று குறிப்பிட்ட ஜெரால்ட், புளோக் 63Bல் உள்ள சிங்கப்பூர் பூல்ஸ் கடைக்குச் சென்று, லாட்டரி சீட்டுக் குப்பையை எறிந்த நபரைக் கண்டுபிடிக்க இயலுமா என்று கேட்டார்.
அந்தச் சீட்டுகள் அனைத்தும் அந்தக் கடையில்தான் வாங்கப்பட்டவை என்பதை உறுதிசெய்த சிங்கப்பூர் பூல்ஸ் ஊழியர்கள், குப்பையை எறிந்தவர் இந்தப் பகுதிவாசியாகத்தான் இருக்க வேண்டும் என்றனர். ஆயினும் அந்த நபரை அடையாளம் காண இயலாது என்று அவர்கள் தெரிவித்தனர்.
தஞ்சோங் பகார் நகர மன்றத்தில் இதன் தொடர்பில் பலமுறை புகார் அளித்ததாக ஜெரால்ட் குறிப்பிட்டார்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity