லிட்டில் இந்தியாவில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் உள்ள உடல் பராமரிப்பு (ஸ்பா) நிலையத்தில் அரைநிர்வாண உடற்பிடிப்புச் சேவைகளும் பாலியல் சேவைகளும் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
உரிமம் இன்றி உடற்பிடிப்பு சேவைகளை வர்த்தக ரீதியில் வழங்கியதற்காக 56 வயதான சூ கோன் யிங் எனும் பெண்ணுக்கு இரண்டு வார சிறைத் தண்டனை நேற்று (நவம்பர் 26) விதிக்கப்பட்டது.
அவரது 62 வயது கணவரான ஓங் ஹான் செங்குக்கு அதே போன்ற குற்றச்சாட்டுக்காக 10 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2016ஆம் ஆண்டில் இதுபோன்றதொரு குற்றச்சாட்டுக்கு தண்டனை பெற்ற ஓங், அதே குற்றத்தைத் திருப்பிச் செய்ததால் அவருக்கு கூடுதல் கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கிச்சனர் ரோட்டில் ‘மோன்டி ஸ்பா’ எனும் உடல் பராமரிப்பு நிலையத்தின் உரிமையாளர் ஓங். கொடுக்கல்-வாங்கல், கணக்குகளை மேற்பார்வையிடுதல், தளவடம், வேலைக்கு ஆள்சேர்ப்பு போன்றவற்றில் ஓங்குக்கு உதவியாக அவரது மனைவி இருந்துவந்தார்.
கடந்த ஆண்டு மே மாதம் 3ஆம் தேதி போலிஸ் மத்திய பிரிவின் அதிகாரிகள் சேதனையிட்டதில், அங்கு அரைநிர்வாண உடற்பிடிப்புச் சேவைகளும் வேறு பாலியல் சேவைகளும் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
போலிசார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் அந்த நிலையத்திலிருந்து ஆணுறைகள் கைப்பற்றப்பட்டன.
அந்தக் காலக்கட்டத்தில் ஓங், அவரது மனைவி ஆகியோரிடம் உடற்பிடிப்பு நிலையத்தை நடத்துவதற்கான உரிமம் இல்லை என்று சிஎன்ஏ செய்தி குறிப்பிட்டது..
மலேசியாவில் வசிக்கும் ஓங்குக்கும் அவரது மனைவிக்கும் தலா $15,000 பிணை வழங்கப்பட்டுள்ளது.
உரிமமின்றி உடற்பிடிப்பு நிலையங்களை நடத்துவோருக்கு அதிகபட்ச தண்டனையாக ஈராண்டு சிறை, $10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மீண்டும் அதே குற்றத்தைப் புரிந்தால் அவர்களுக்கு ஐந்தாண்டுகள் வரை சிறை, $20,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity