ஸ்டேட்ஸ் டைம்ஸ் ரிவியூ செய்தித் தளத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள கருத்துகளைத் திருத்தியமைக்க அந்த ஃபேஸ்புக் பக்கத்தின் நிர்வாகிக்கு சிங்கப்பூரின் பொய்ச்செய்தி சட்டத்தின்படி உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், தான் அந்த உத்தரவுக்கு அடிப்பணிய போவதில்லை என்றும் அந்தத் தளம் கூறியுள்ளது.
‘பொஃப்மா’ எனப்படும் இணைய வழி பொய்ச்செய்திக்கும் சூழ்ச்சித் திறத்துக்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி, உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது இது இரண்டாவது முறை.
கடந்த திங்கட்கிழமை முதன் முறையாக இச்சட்டத்தின் அடிப்படையில் எதிர்க்கட்சி உறுப்பினர் பிராட் போயர் எழுதிய மற்றொரு ஃபேஸ்புக் பதிவைத் திருத்தி அமைக்க உத்தரவிடப்பட்டது. உள்துறை அமைச்சர் கா. சண்முகத்தின் உத்தரவின்படி, ஸ்டேட்ஸ் டைம்ஸ் ரிவியூ செய்தித் தளத்தின் ஃபேஸ்புக் பக்கத்தின் நிர்வாகியான அலெக்ஸ் டான் ஸி சியாங் இம்மாதம் 23ஆம் தேதி இடம்பெற்ற ஃபேஸ்புக் பதிவை திருத்தி அமைக்க கேட்டுக்கொள்ளப்பட்டதாக ‘பொஃப்மா’ அலுவலகம் நேற்று தெரிவித்தது.
மக்கள் செயல் கட்சி உறுப்பினர் ரேச்சல் ஓங் பற்றியும் என்யுஎஸ் ‘எஸ்யு-என்யுஎஸ் ஸ்டூடன்ஃஸ் யுனைடெட்’ ஃபேஸ்புக் பதிவு பற்றியும் ஸ்டேட்ஸ் டைம்ஸ் ரிவியூ செய்தித் தளத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஸ்டேட்ஸ் டைம்ஸ் ரிவியூ செய்தித் தளத்தின் ஃபேஸ்புக் பக்கத்தின் பதிவுக்கு மேலே ‘இதில் பொய்த்தகவல்கள் உள்ளன’ என்று குறிப்பிடப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சு தனது அறிக் கையில் தெரிவித்தது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழக மாணவர் சங்கத்தின் ‘எஸ்யு-என்யுஎஸ் ஸ்டூடன்ஸ் யுனை டெட்’டின் ஃபேஸ்புக் பக்கத்தில் அமைச்சர் சண்முகம் கூறியதை தவறாகப் பொருள்படுத்தி எழுதியிருந்தது என்று ஸ்டேட்ஸ் டைம்ஸ் ரிவியூ ஃபேஸ்புக் பக்கம் தகவல் வெளியிட்டிருந்தது. அதில் குமாரி ஓங்கின் கிறிஸ்துவத் தொடர்புகளை அம்பலப்படுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்றும் மற்றொருவர் விசாரிக்கப்பட்டு வருகிறார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தத் தகவல் பொய்யானது என்றும் ஆதாரமற்றது என்றும் இதன் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் உள்துறை அமைச்சு கூறியது. சிங்கப்பூரின் தேர்தல் முறை பற்றியும் ஸ்டேட்ஸ் டைம்ஸ் ரிவியூ தனது கட்டுரை ஒன்றில் இழிவான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும் அமைச்சு விவரித்தது. இந்தக் குற்றச்சாட்டுகள் அபத்தமானவை என்றும் சிங்கப்பூரின் தேர்தல் முறை மக்களின் மிக உயர்வான நம்பிக்கையைக் கொண்டு உள்ளது என்றும் கூறிய அமைச்சு, தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட் டிருப்பதுபோல அது மிகவும் வெளிப்படையாக நடத்தப்படுகிறது என்றும் விளக்கியது.
“ஸ்டேட்ஸ் டைம்ஸ் ரிவியூ செய்தித்தளத்தின் நிர்வாகியான 32 வயது அலெக்ஸ் டான் தற்போது நாட்டில் இல்லை. தெமாசெக் ரிவியூ நியூஸ், சிங்கப்பூர் ஹெரால்டு போன்ற பல்வேறு தளங்களின் ஆசிரியராகவும் அவர் செயல்படுகிறார் என்றும் அமைச்சு கூறியது.