சிங்கப்பூரர்கள் தங்களுடைய ஓய்வுக்கால நிதிக்கு அதிக அளவு பங்களித்து வருகின்றனர் என்று மத்திய சேம நிதிக் கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. கடந்த ஜனவரியிலிருந்து அக்டோபர் வரையில் ஓய்வுகால கணக்கில் பணம் நிரப்பும் திட்டத்தின் கீழ் சிங்கப்பூரர்கள் 1.6 பில்லியன் வெள்ளி சேர்த்துள்ளனர். இது, கடந்த ஆண்டில் சேர்க்கப்பட்ட 1.5 பில்லியன் வெள்ளியுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும்.
2018ஆம் ஆண்டு முழுவதும் மத்திய சேம நிதி உறுப்பினர்கள் தங்களுடைய கணக்குகளில் இரண்டு பில்லியன் வெள்ளியை சேர்த்துள்ளனர்.இந்தத் தொகை 2015ல் 934 மில்லியன் வெள்ளியாக இருந் தது. மசேநிதி உறுப்பினர்கள், ஓய்வுக்கால சேமிப்பை அதிகரிக்க சிறப்பு கணக்கிலோ, ஓய்வுக்கால கணக்கிலோ அல்லது தங்களுடைய அன்புக்குரியவர் கணக்கிலோ பணம் போடலாம்.
“ரொக்கம் அல்லது நிதி மாற்று போன்றவை மூலமாக நிரப்பப்படும் பணம் உறுப்பினர்களின் ஓய்வுகால சேமிப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இதனால் உறுப்பினர்கள் தங்களுடைய ஓய்வுக் காலத்தில் அதிக தொகையை பெறுவார்கள்,” என்று கழகத்தின் அறிக்கை குறிப்பிட்டது.
உறுப்பினர்களின் கணக்குகளில் அரசாங்கம் பணம் நிரப்பியதால் அதிகமான உறுப்பினர்களின் அடிப்படை ஓய்வுக்கால கணக்கில் போதுமான நிதி அல்லது அதற்கும் மேலாக பணம் சேர்ந்துள்ளது என்று அது கூறியது. கடந்த மூன்று ஆண்டுகளில் மசேநிதி உறுப்பினர் கணக்கில் பணம் போடப்பட்டதால் ஏறக்குறைய 24,000 உறுப்பினர்கள், அடிப்படை ஓய்வுக்கால நிதியைப் பெற்றுள்ளனர் என்றும் அறிக்கை வாயிலாக கழகம் தெரிவித்தது.