அடுத்த பொதுத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் வாக்காளர்களுக்கு வேட்பாளர்களுக்கும் அதிக வசதி கிடைக்கும் வகையில் கூடுதல் மின்னிலக்கச் சேவைகள் அறிமுகம் செய்யப்படுவதாக தேர்தல் துறை தெரிவித்து உள்ளது.
சுய-மை பேனாவும் அவற்றுள் அடங்கும். புதிய முன்மாதிரி வாக்களிப்புப் பெட்டிகள் குறித்தும் அத்துறை இன்று அறிவித்தது. வேட்பாளர்கள் நிரப்ப வேண்டிய விவரங்களை அவர்கள் இனிமேல் இணையத்திலேயே பூர்த்தி செய்யலாம்.
தங்களது முகவர்களை நியமிப்பது, வைப்புத்தொகை வழங்கல் மற்றும் தங்களது வேட்புமனுத் தாட்களைத் தயார் செய்வது உள்ளிட்ட பணிகளை வேட்பாளர்கள் இணையம் மூலம் செய்ய முடியும். இருப்பினும் வேட்பு மனுத் தாக்கல் தினத்தன்று வேட்பு மனுவின் தாள் நகல்களை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டியது தொடரும்.
சிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2021 ஏப்ரல் மாத்திற்குள் நடத்தப்பட வேண்டும். தேர்தல் எல்லைகளுக்கான மறுஆய்வுக் குழு அமைக்கப்படுவதற்கான அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. பொதுத் தேர்தல் பணிகளுக்கான முதல் படியாக அது கருதப்பட்டது.
பிரதமர் லீ சியன் லூங் தலைமையிலான அரசாங்கம் மூன்று பொதுத் தேர்தல்களைச் சந்தித்துள்ளது. குழு ஏற்படுவது குறித்த அறிவிப்புக்கும் வாக்களிப்பு தினத்துக்கும் இடைப்பட்ட காலம் இரண்டு மாதங்களுக்கும் ஆறு மாதங்களுக்கும் இடைப்பட்டதாக இதுவரை இருந்து வந்துள்ளது.
வரும் பொதுத் தேர்தலுக்கு வாக்களிப்போருக்கு சுய-மை பேனாக்கள் தரப்படும். இந்த பேனாக்கள் மூலமாக வாக்காளர்கள் சிவப்பு நிற ‘எக்ஸ்’ குறியை எளிதில் முத்திரையிட்டு தங்களுக்கு விருப்பமான கட்சியைத் தெரிவு செய்யலாம். தென்கொரியா போன்ற நாடுகளில் இது நடைமுறையில் உள்ளது.
இதற்கு முன்னர் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டு வந்த பேனாவை மூத்த குடிமக்கள் இறுக்கிப் பிடிக்க சிரமப்பட்டதாக இணையம் மூலம் வெளிவந்த கருத்துரைகளைக் கவனத்தில் கொண்டு புதிய சுய-மை பேனா பயன்படுத்தும் யோசனை உருவாக்கப்பட்டதாக தேர்தல் துறை குறிப்பிட்டது.
சில தொகுதிகளில் முன்மாதிரி வாக்களிப்புப் பெட்டிகளையும் வாக்காளர்கள் காணலாம். அட்டைகள், மறுசுழற்சிப் பொருட்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழக மாவணர்கள் வடிவமைத்துள்ள இது ஒவ்வொன்றுக்கும் ஆகும் செலவு $30. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பழைய முறையில் இந்தச் செலவு $750 ஆக இருந்தது.
புதிய சாதனங்களைப் பிரபலப்படுத்தும் நோக்கில் தேர்தல் துறை சாலைக் காட்சிகளை நடத்த உள்ளது. தேர்தல் எல்லை மறுஆய்வுக் குழுவின் அறிக்கைக்குப் பின்னர் சுமார் 40 இடங்களில் சாலைக்காட்சி இடம்பெறும்.
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் புதிய மின்னிலக்கச் சேவைகளைப் பயன்படுத்துவது குறித்து விளக்கப்பட்டு அது குறித்து கருத்துகள் அவர்களிடம் இருந்து திரட்டப்படும் என்றும் தேர்தல் துறை தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் கடந்த ஆண்டு சில மாற்றங்களை தேர்தல் துறை அறிவித்து இருந்தது. வாக்காளர்கள் தங்களது விவரங்களை வாக்களிப்பு நிலையங்களில் மின்னிலக்க முறையில் பதிவு செய்துகொள்வதோடு வாக்குச் சீட்டு எண்ணும் இயந்திரத்தில் வாக்களித்த விவரத்தை அவர்கள் சரிபார்த்துக்கொள்ளலாம்.
இருந்தபோதும், வாக்குச் சீட்டுகள் தொடர்ந்து காகித வடிவில்தான் இருக்கும். அத்துடன் தேர்தல் துறை அதிகாரிகள் எப்போதும்போலவே வாக்குகளைக் கைகளால் வகை வாரியாகப் பிரித்துவைப்பர்.
வாக்காளர்கள் தங்களது சிங்பாஸைப் பயன்படுத்தி தேர்தல் பதிவகத்தில் உள்ள பெயர், அடையாள அட்டை எண், முகவரி போன்றவ விவரங்களைச் சரிபார்க்கலாம்.
தங்களது வாக்களிப்பு தகுதி, வாக்காளர் வரிசை எண், தேர்தல் பிரிவு மற்றும் வாக்களிப்பு வட்டாரம் போன்றவற்றையும் அவர்கள் அறிந்துகொள்ள முடியும். மனுத்தாக்கல் தினத்திற்குப் பிறகு மின்னியல் வாக்குச் சீட்டைப் பெறுவர். சிங்பாஸ் செயலி அல்லது தேர்தல் துறை இணையத்தளம் போன்றவை மூலம் அதனை அவர்கள் பெறலாம். வழக்கமான வாக்குச்சீட்டுக்கு மாற்றாக அதனைப் பயன்படுத்த முடியும். ஆயினும், அஞ்சல் மூலம் வாக்குச் சீட்டு அனுப்பி வைக்கப்படும்.
சக்கர நாற்காலி வாக்காளர்களுக்கென தனித்துவமான வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity