புற்றுநோயாளிகளுக்கு மேலுமோர் உதவித் திட்டம்

புற்றுநோயாளிகளுக்கு மேலுமோர் உதவித் திட்டம்

2 mins read
0d372adc-e16f-40d0-9c27-d68478c5a9ad
(படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

புற்றுநோயிலிருந்து குணமடைந்தவர்களுக்காக மேலும் ஓர் உதவித் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

நோயிலிருந்து மீண்டவர்களுக்கு, வழக்கமான மருத்துவ சிகிச்சையுடன் உணர்வு ரீதியான ஆதரவையும் சமூக ஆதரவையும் இணைத்து வழங்கும் இந்தப் புதிய $2.1 மில்லியன் முன்னோடித் திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட 4,000 மார்பகப் புற்றுநோய் நோயாளிகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெமாசெக் அறக்கட்டளை, சிங்கப்பூர் தேசிய புற்றுநோய் நிலையம் ஆகியவற்றின் பங்காளித்துவமான தெமாசெக் அறக்கட்டளையின் அசெசஸ் (நோயிலிருந்து மீண்டவர்களுக்கு ஆதரவைச் சாத்தியமாக்கும் புற்றுநோய் பராமரிப்பு) திட்டத்தின்கீழ் ஈராண்டுகளுக்கு இயங்கும்.

சுகாதார மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் நேற்றுத் தொடங்கி வைத்த இந்த முன்னோடித் திட்டம், மூன்று கூறுகளை உள்ளடக்கியது. சிங்கப்பூர் தேசிய புற்றுநோய் நிலையத்திற்குச் (என்சிசிஎஸ்) செல்லும்போது நோயாளிகளின் உணர்வுநிலையை பலதுறைகளைச் சேர்ந்த ஆதரவுக் குழு மூலம் கண்டறிவது; சிகிச்சைக்குப் பிந்திய நோயாளி பராமரிப்புக்கான மருத்துவ ஆதரவு சேவைக்கு ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்குவது; அத்தகைய சமூக பங்காளிகள் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்குத் தரமான பாரமரிப்பு சேவையை வழங்க உதவும் என்சிசிஎஸ்-இன் பயிற்சித் திட்டம்

இதில், பொது மருத்துவர்கள், சமூக சேவையாளர்கள், புனர்வாழ்வு சிகிச்சையாளர்கள் போன்றோர் சமூக பங்காளிகளில் அடங்குவர். பயிற்சி பெற்ற இவர்கள், ஆலோசனை முதல் உடல் இயக்க சிகிச்சை, நோய்த்தடுப்பு சிகிச்சை வரையிலான சேவைகளை வழங்குவார்கள்.

"சோதனை, சிகிச்சை முறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பல ஆரம்ப, முற்றிய புற்றுநோயாளிகளின் உயிர்வாழ்தலை மேம்படுத்தியுள்ளது.

"எனினும், புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் பெரும்பாலும் எண்ணற்ற உடல், உளவியல், உணர் ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்," என்று சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அகடெமியா அரங்கில் பேசிய டாக்டர் கோர் கூறினார்.

"புற்றுநோயைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதில் சுகாதாரத் துறை நிபுணர்கள் செயல்படும் வேளையில், புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் நல்ல வாழ்க்கைத் தரத்தை எட்ட உதவும் முயற்சிகளில் நாம் ஈடுபடுவது முக்கியம்," என்றார் அவர்.

சிங்கப்பூரில் நால்வரில் ஒருவருக்கு அவரது வாழ்நாளில் புற்றுநோய் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரில் கண்டறியப்படும் புதிய புற்றுநோய்களின் எண்ணிக்கை 2008 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் 57,243 ஆக இருந்தது, 2013 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் 71,26 ஆக அதிகரித்துள்ளது.

"இந்த முன்னோடித் திட்டத்திலிருந்து 4,000 மார்பக புற்றுநோயாளிகள் பயனடைவது ஒரு தொடக்கமாக இருக்கும். எதிர்காலத்தில், ஒவ்வொரு என்சிசிஎஸ் புற்றுநோய் நோயாளிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று சிங்கப்பூர் தேசிய புற்றுநோய் நிலையத்தின் தலைவரும், நோய்த்தடுப்பு, ஆதரவு சிகிச்சை பிரிவின் மூத்த ஆலோசகருமான டாக்டர் பாட்ரிசியா நியோ கூறினார்.