சிங்கப்பூரர்கள் நெகிழிக் (பிளாஸ்டிக்) கழிவுகளின் ஆபத்து குறித்து உணர்ந்து வருகின்றனர். ஆனால், மறுசுழற்சி விகிதம் இங்கு மிகவும் குறைவு. சிங்கப்பூரில் சென்ற ஆண்டு 949,300 டன் நெகிழிக் கழிவுகள் வீசியெறியப்பட்டன. எனினும், இதில் 40,700 டன், அதாவது 4% மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவிக்கிறது. அதற்கு ஒரு காரணம் இங்குள்ள நெகிழிக் கழிவுகள் மறுசுழற்சிக்கு ஒத்துவராத, அதிக அளவிலான பாதிப்புத்தன்மையைக் கொண்டவை.
உணவு வகைகளை எடுத்துச் செல்லும் நெகிழிப் பாத்திரங்கள், சோடா பானங்கள் அடைக்கப்பட்ட தகர டின்கள் ஆகியவற்றை மறுசுழற்சி செய்யும் வகையில் முழுமையாகச் சுத்தம் செய்ய முடியாது. அது, மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களுக்குப் பெரிய சவாலாகவும் அதிக செலவை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. இதனால் பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகள் பொதுவான கழிவுகளாகவே எறியப்படுகின்றன.
மேலும், மறுசுழற்சி செய்யும் உள்ளூர் நிறுவனங்கள் குறைவாக இருப்பதால் மறுசுழற்சி விகிதமும் சிங்கப்பூரில் குறைவு. சிங்கப்பூரில் சென்ற ஆண்டு மறு சுழற்சி செய்யப்பட்ட 4% அதாவது 40,700 டன் கழிவில் 7% மட்டுமே உள்ளூரில் மறுசுழற்சி செய்யப்பட்டது. மற்றவை வெளிநாடுகளில் மறுசுழற்சி செய்யப்பட்டன.
467 மில்லியன் நெகிழிப் புட்டிகள்
‘பெட்’ எனப்படும் ஒருவகையான பாலிதின் நெகிழிப் புட்டிகள் சிங்கப்பூரில் பயன்படுத்தப்படுகின்றன. இவை உலகில் மிக அதிகமாக மறுசுழற்சி செய்யப்படும் நெகிழிப் பொருட்களாகும். சிங்கப்பூரில் சென்ற ஆண்டு பயன்படுத்தப்பட்ட 1.76 பில்லியன் நெகிழிப் பொருட்களில் நான்கில் ஒரு பங்கிற்கும் அதிகமானவை தண்ணீர் போத்தல்கள் ஆகும். கடந்த ஆண்டு சிங்கப்பூரில் 467 மில்லியன் பாலிதீன் நெகிழிப் புட்டிகள் பயன்படுத்தப்பட்டன. இந்த புட்டிகளை ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தி வைத்தால், சிங்கப்பூரை 17 முறை சுற்றி வரக் கூடிய அளவுக்கு இருக்கும்.
820 மில்லியன் நெகிழிப் பைகள்
சென்ற ஆண்டு சிங்கப்பூரர்கள் பயன்படுத்திய 1.76 பில்லியன் நெகிழிப் பொருட்களில் கிட்டத்தட்ட பாதி அளவு பேரங்காடிகளில் பயன்படுத்தப்படும் நெகிழிப் பைகள் ஆகும். இது சராசரியாக ஒருவர் 145 பைகளைப் பயன்படுத்துவதற்கு ஈடாகும். சென்ற 2018ல் சிங்கப்பூரர்கள் பேரங்காடிகளில் இருந்து 820 மில்லியன் நெகிழிப் பைகளைப் பயன்படுத்தினர்.
மலேசியா நடவடிக்கை
சட்ட விரோதமாக கழிவுப் பொருட்கள் கொட்டிக்கிடக்கும் என்ற நாடு என்ற பெயரை சீனாவுக்கு அடுத்து பெற்றிருக்கும் மலேசியா, தற்பொழுது அதற்கு எதிராகப் போரிடத் தொடங்கியுள்ளது. கழிவுப் பொருட்களுக்கென ஒரு தனிப் பகுதியை உருவாக்க மலேசியா திட்டமிட்டுள்ளது. அத்துடன், பல சட்டவிரோத மறுசுழற்சி ஆலைகளை மூடவும் உத்தரவிட்டுள்ளது. அவற்றில் சில குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் இருப்பதுடன் போதுமான வசதிகள் இல்லாமலும் இருக்கின்றன.
மேலும், சட்டப்படி கழிவுப் பொருட்களை இறக்குமதி செய்வோர் ஒரு டன் நெகிழிக் கழிவுகளுக்கு 50 மலேசிய ரிங்கிட் ($16.30) தீர்வை செலுத்த வேண்டியுள்ளது. முன்னதாக இது மலேசிய ரிங்கிட் 15 ஆக இருந்தது. புதிய தீர்வை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து நடப்புக்கு வந்துள்ளது.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் சீனா, நெகிழிக் கழிவுப் பொருட்கள் இறக்குமதிக்கு தடைவிதித்ததைத் தொடர்ந்து அந்தக் கழிவுகள் தென்கிழக்காசிய நாடுகளை நோக்கி வரத் தொடங்கின. அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற பணக்கார நாடுகள் தங்களுடைய கழிவுப் பொருட்களை இந்த வட்டாரத்துக்குத் திருப்பிவிட்டன. இதன் தொடர்ச்சியாக, பல நிறுவனங்கள் மேற்கத்திய நாடுகளிலிருந்து வரும் கழிவுப் பொருட்களை ஆவலுடன் இறக்குமதி செய்தன. ஆனால், அவற்றில் சில நச்சுத்தன்மை கொண்டவை.
சுற்றுச்சூழல் அதிகாரிகள் திக்கு முக்காடினர். கழிவுப் பொருட்கள் சட்டவிரோதமாகக் கொட்டப்படுவது, பதப் படுத்தப்படுவது, எரிக்கப்படுவது ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
இந்த நச்சுத்தன்மை பரவலால் ஏற்படும் விளைவுகளைக் கண்டு ஆத்திரமடைந்த மலேசியா, இந்தோனீசியா போன்ற நாடுகள் சட்டவிரோதமாக இவற்றை இறக்கு மதி செய்யும் நிறுவனங்களுக்கு அப ராதம் விதிக்கத்தொடங்கின. கழிவுப் பொருட்களைக் கொண்டு வந்த கப்பல்களைத் திருப்பி அனுப்பின.
நெகிழிக் கழிவுகள் ஏற்றுமதி
பெரும்பாலான நெகிழிக் கழிவுகள் மறுசுழற்சிக்காக மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டு வரை சீனா நீண்டகாலமாக நெகிழிக் கழிவுகளைக் கொட்டும் இடமாக இருந்து வந்துள்ளது. சென்ற ஆண்டு நெகிழிக்
கழிவு இறக்குமதிக்கு சீனா தடைவிதித்தது.
நெகிழிக் கழிவுகள் இறக்குமதி
2018ல் நெகிழிக் கழிவுகள் இறக்குமதியை சீனா தடை செய்ததால், மலேசியா புதிய நிலையமாக உருவானது. ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான் இவை மொத்தம் 650,000 டன் நெகிழிக் கழிவுகளை ஏற்றுமதி செய்கின்றன.
மறுசுழற்சி சிரமங்கள்
1) கடுமையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதி முறைகளால் இவர்களுக்கு லாபம் கிடைப்ப தில்லை.
2) தரம்குறைந்த மறுசுழற்சி நெகிழிப் பொருட்கள் மலேசியா, இந்தியா, தாய்லாந்து, வியட்னாம், இந்தோனீசியா போன்ற கட்டுப்பாடு குறைந்த நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.
3) நெகிழி மறுசுழற்சி ஊழியர் களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. சட்டவிரோத இடங்களில் அவர்கள் வேலை செய்கின்றனர். ஏற்றுமதி செய்யப்படும் பெரும்பாலான நெகிழிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய முடியாது. மிட்டாய் உறைகள், நெகிழி பூசப்பட்ட காகிதக் குவளை கள் போன்றவற்றை மறுசுழற்சி செய்ய செலவு அதிகமாகும்.
4) பயன்படுத்த முடியாத நெகிழி களை எரிப்பதே எளிதான வழியாக உள்ளது. நெகிழியை எரிப்பதால் வெளியாகும் கார்பன் மோனாக்சைட் போன்ற வாயுக் கள் சுற்றுச்சூழலைப் பாதிக்கின்றன.
நிலத்தை நிரப்பப் பயன்படும் நெகிழிச் சாம்பல்களும் சுற்றுச்சூழலை மாசுபடுத் துகின்றன. தொழிற்சாலைகளால் நீர்நிலைகளும் பாதிப்படைகின்றன.