வளர்ந்து வரும் தொழில்துறைகளில் குடியிருப்பாளர்களுக்கு வேலை, பயிற்சி வாய்ப்புகளை வழங்கும் ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ சாலைக்காட்சி ஒன்று நேற்று முன்தினம் ஈசூன் வட்டாரத்தில் நடைபெற்றது.
குறிப்பாக, சுகாதாரப் பராமரிப்பு, பாதுகாவல் துறைகளில் 200க்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் இந்தச் சாலைக்காட்சியில் வழங்கப்பட்டன.
சிங்கப்பூர் மக்கள்தொகை மூப்படைந்து வருவதாலும் பாதுகாப்பு அச்சுறுத்தல் சம்பவங்
களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் மேற்கூறப்பட்ட இவ்விரு துறைகளும் நாட்டின் எதிர்காலத்திற்கு முக்கியமானவையாக உள்ளன.
சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் இந்தச் சாலைக்காட்சியில் சிறப்பு விருந்தின
ராகக் கலந்துகொண்டார். இதில் பங்கேற்றவர்கள் முன்னிலையில் பேசிய அவர், மாறிவரும் உலகப் பொருளியலில் போட்டித்தன்மையுடனும் காலத்திற்கு ஏற்புடையதாக இருப்பதற்கும் தேசிய அளவிலான ஒரு முக்கிய திட்டமாக ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ விளங்குவதாக குறிப்பிட்டார்.
“சீனா, பிலிப்பீன்ஸ், இந்தோனீசியா உள்ளிட்ட உலக நாடுகளில் வசிப்பவர்களிடமிருந்து போட்டி வருகிறது.
“மற்ற நாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தைவிட நமது ஊழியர்களுக்கு அதிகமான சம்பளம் வழங்கப்படுவதற்கு, மற்ற நாட்டினரைக் காட்டிலும் நமது உற்பத்தித்திறன் அதிகமாக இருக்கவேண்டும். இதுதான் நம் நாட்டிற்கு மிகப் பெரிய சவால்.
“பெரும்பாலானோருக்கு வேலை இருக்கிறது. ஆனால் போட்டி இன்னும் கூடிக்கொண்டே போகிறது. அந்தப் போட்டியை எதிர்நோக்குவதற்கு நமக்கு புத்தாக்கமும் ஊக்கமும் வேண்டும். இது ஒரு முக்கியமான குறிக்கோளாக அனைவரும் எடுத்துக்கொள்ளும்படி நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார் அவர்.
இந்நிகழ்ச்சியில் சுமார் 500 பேர் பங்கேற்றனர்.