சிங்கப்பூர் தேசிய சின்னங்களின் 60வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தேசிய கீதம் புதுப்பிக்கப்படவுள்ளது.
சிங்கப்பூர் பல்லிய இசைக் குழு இந்தப் புதிய வடிவை அமைத்து இருப்பதாக கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ நேற்று தெரிவித்தார்.
தேசிய கீதம், தேசிய கொடி, அரசு முத்திரை ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டு 60 ஆண்டுகால நிறைவைக் குறிக்கும் நினைவு விழாவின் ஓர் அங்கமாக புதுப்பிக்கப்பட்டுள்ள தேசிய கீதம் நாளை வெளியிடப்படும்.
ஜூரோங் ஏரி தோட்டத்தில் நேற்று நடைபெற்ற விளையாட்டுக் கேளிக்கை நிகழ்ச்சியில் திருவாட்டி ஃபூ இதனைத் தெரிவித்தார்.
1958ஆம் ஆண்டில், மறைந்த ஸுபிர் சையதால் முதன்முறையாக இசையமைக்கப்பட்ட தேசிய கீதத்தின் இசை வடிவத்தில் சிறு மாற்றங்களை அறிமுகப்படுத்தினார் இசையமைப்பாளரும் கலாசாரப் பதக்கம் வென்றவருமான திரு பூன் இயூ தியன்
இளம் தேசமான சிங்கப்பூருக்கு அப்போது தேசிய சின்னங்கள் கிடைத்தது ஒரு முக்கிய தருணம் என்ற திருவாட்டி ஃபூ, சிங்கப்பூர் தேசிய அடையாளத்தின் தூணாக அவை விளங்குவதாக குறிப்பிட்டார்.
“அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூரர்கள் கொடியைப் பெருமையாக பறக்கவிடுகின்றனர். தேசிய கீதத்தைப் பெருமையுடன் பாடுகின்றனர்,” என்றும் அமைச்சர் கூறினார்.
பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்று வரும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் பற்றி பேசிய திருவாட்டி ஃபூ, “நமது சிங்கப்பூர் வீரர்கள் பெருமையுடன் நாட்டைப் பிரதிநிதிக்கின்றனர். அவர்கள் வென்றால், தேசிய கீதம் அங்கு ஒலிக்கும்.
“சிங்கப்பூரில் இருந்தாலும் சரி, வெளிநாட்டில் இருந்தாலும் சரி, தேசிய கீதம் வாசிக்கப்படும்போது சிங்கப்பூரர்களுடனும் நாட்டுடனும் ஒன்றாக இருப்பது போன்ற உணர்வைத் தருகிறது,” என்றார் அவர்.