சாலையோர குழிக்குள் விழுந்த பெண்; ஈராண்டுகளுக்குப் பிறகு பல மில்லியன் வெள்ளி இழப்பீடு கோரி வழக்கு

சாலையோர குழிக்குள் விழுந்த பெண்; ஈராண்டுகளுக்குப் பிறகு பல மில்லியன் வெள்ளி இழப்பீடு கோரி வழக்கு

3 mins read
d3b7a031-d1bd-4a4a-a65a-de4611f3e736
கோவனுக்கு அருகில் உள்ள சைமன் ரோட்டின் நடைபாதையில் 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதி காலை வேளையில் நடந்துகொண்டிருந்தபோது திருவாட்டி சான் குழிக்குள் விழுந்தார். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நடைபாதையில் திறந்திருந்த மேன்ஹோலுக்குள் விழுந்ததால் காயமடைந்த 46 வயது சான் ஹுய் பெங் எனும் மாது பொதுப் பயனீட்டுக் கழகம் கவனக் குறைவாக இருந்ததாகக் கூறி அதன் மீது வழக்குத் தொடுத்துள்ளார். இழப்பீடாக அவர் பல மில்லியன் வெள்ளி கோரியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஈராண்டுகளாக மனநல சிகிச்சை பெற்று வரும் அவர், தனது கணக்காளர் பணிக்கும் அவர் செல்லவில்லை என ஆவணங்கள் குறிப்பிட்டன.

திருமணமான திருவாட்டி சான், தனது வருமான இழப்பு, தாய்மையடைவதற்கான சாத்தியக்கூறு போன்றவற்றுக்கும் சேர்த்து இழப்பீடு கோருவதாகக் கூறப்படுகிறது.

அவரது தரப்பு வழக்கில் வெற்றி பெற்றால் வருமான இழப்பு, மனநலப் பிரச்சினைகள், எதிர்கால மருத்துவச் செலவு, வலி மற்றும் வேதனை போன்றவற்றுடன் கடந்தகால மருத்துவ சிகிச்சை செலவு, இதர செலவுகள் என 665,000 வெள்ளியையும் சேர்த்து இழப்பீட்டுத் தொகை மதிப்பிடப்படும்.

ஆனால், தனது தரப்பில் கவனக்குறைவு இல்லை என்று தற்காப்பு வாதத்தில் குறிப்பிட்டுள்ள கழகம், மற்ற பாதசாரிகளின் கண்களுக்குத் தெரியும் வகையில் திறந்திருந்த குழிக்குள் விழுந்த திருவாட்டி சான் கவனக் குறைவாக இருந்ததாகவும் கூறியுள்ளது.

கோவனுக்கு அருகில் உள்ள சைமன் ரோட்டின் நடைபாதையில் 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதி காலை வேளையில் நடந்துகொண்டிருந்தபோது திருவாட்டி சான் குழிக்குள் விழுந்தார்.

செவ்வக வடிவிலான அந்தக் குழி திறந்திருந்ததாகவும் அதற்குள் தாம் 2 மீட்டர் ஆழத்துக்கு விழுந்ததாகவும் குறிப்பிட்ட திருவாட்டி சான், எச்சரிக்கைக் குறிப்புகள் ஏதும் அங்கு வைக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

சைமன் ரோட்டின் செங்குத்து திருப்பம் ஒன்றில் திரும்பிய திருவாட்டி சானுக்கு கோவன் ரெசிடென்சஸ் கொண்டோமினியத்தின் உயரமான கல் எல்லை அதற்கு அப்பாலிருந்த 'மேன்ஹோல்' திறந்திருந்ததை மறைத்ததாக திருவாட்டி சான் குறிப்பிட்டுள்ளார்.

தனது இடப்புறத்தில் கோவன் சுவரும் வலப்புறத்தில் மின்சார கம்பிவடத் தொகுப்பு போன்றவை இருந்ததாகவும் தனக்கு முன்பாக கழகத்தின் மூன்று அதிகாரிகள் இருந்ததாகவும் தமது ஆவணத்தில் குறிப்பிட்ட திருவாட்டி சான், அங்கிருந்த சிறிய இடைவெளியில் தாம் முன்னேறிச் சென்றதாகச் சொன்னார். அவர் குழிக்குள் காலை வைத்தபோது அங்கிருந்து சுமார் 1 மீட்டர் தூரத்தில் கழக அதிகாரிகள் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

குழிக்குள் விழுந்த திருவாட்டி சானை உடனடியாக மீட்ட அதிகாரிகள் அருகிலிருந்த மருந்தகத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கீழே விழுந்ததால் ஏற்பட்ட சிராய்ப்புகள், இடுப்பில் காயம், வலது கணுக்காலுக்கு அருகில் எலும்பு முறிவு உட்பட வேறு காயங்களும் திரு சானுக்கு இருந்ததாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவருக்கு 658 நாட்கள் மருத்துவ விடுப்பு அளிக்கப்பட்டது. மொத்தம் அவர் ஈராண்டுகள், 10 மாதம் அத்தகைய விடுப்பில் இருந்தார்.

அதன் காரணமாக 2016ஆம் ஆண்டு அவருக்கு கிடைக்கவிருந்த பதவி உயர்வு கைநழுவியது என்று கூறினார் திருவாட்டி சான்.

சம்பவத்தன்று அந்தக் குழியைப் பார்வையிடுவதற்காக மூன்று அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்றதாகவும், அதன் இரும்பு மூடி திறக்கப்பட்டு அருகில் இருந்த சுவரின் மீது சாத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் கழகத்தின் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தக் குழிக்குள் இரண்டு அதிகாரிகள் இறங்கி சோதனை செய்தபோது ஓர் அதிகாரி மேலே நின்று பாதசாரிகளை எச்சரித்துக்கொண்டிருந்தார் எனவும் உள்ளே சென்ற இருவர் மேலே வந்ததும் அம்மூவரும் குழிக்கு அருகில் நின்று மேற்கொண்டு பரிசோதனைகள் தேவையா என்பது பற்றி பேசிக்கொண்டிருந்ததாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

சம்பவத்துக்குப் பிறகு திருவாட்டி சானை சந்தித்த கழக ஊழியர், பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதுடன் கழகத்தின் தரப்பில் திருவாட்டி சானுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிப்பும் கோரப்பட்டது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity