சிங்கப்பூரில் உள்ள உயர்நிலை மற்றும் பல்கலைக்கழக புகுமுக வகுப்பு மாணவர்கள் 16,000 பேரில் ஒருவர் கல்வி உபகாரச் சம்பளம் பெற்ற இந்திய நாட்டு மாணவர் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.
கல்வி உபகாரச் சம்பளத்தில் படிக்கும் அனைத்துலக மாணவர்கள், இங்குள்ள மாணவர்களில் 0.9 விழுக்காட்டினராக உள்ளதாக அதன் ஃபேஸ்புக் பதிவில் அமைச்சு கூறியது. அந்த எண்ணிக்கையில் 0.7 விழுக்காட்டினர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் கல்வி உபகாரச் சம்பளம் வழங்கப்படுவதாக இணையத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருவதற்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சு இந்தப் புள்ளிவிவரங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளது.
இந்தக் கல்வி உபகாரச் சம்பளத் திட்டங்களில் சிலவற்றுக்காக அறிவியல், தொழில்நுட்ப, ஆய்வு அமைப்பு (ஏஸ்டார்), சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) போன்ற அமைப்புகளுடன் கல்வி அமைச்சு இணைந்து செயல்படுவதாக அமைச்சு விளக்கியது.
இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் இக்கல்வி உபகாரச் சம்பளம், ஈராண்டுக்குப்பின் மேல்நிலை அல்லது அதற்கு ஈடான சான்றிதழைப் பெற்றுத் தரும்.
இதற்கான தேர்வுச் சுற்றுகளும் நேர்காணல்களும் புதுடில்லியில் நடைபெறும். இந்தியாவைத் தவிர ஆசிய நாடுகள், சீனா ஆகியவற்றைச் சேர்ந்த திறன்வாய்ந்த இளம் அனைத்துலக மாணவர்களுக்கும் இத்தகைய கல்வி உபகாரச் சம்பளத்தை வழங்கி வருவதாக அமைச்சு கூறியது.
“ஒரு குறிப்பிட்ட நாட்டின் மாணவர்களை மட்டும் குறிவைத்துக் கல்வி உபகாரச் சம்பளத்தை வழங்குவதைப் போன்ற தோற்றத்தை மாற்ற, சில இணையத்தளங்களைத் திருத்தி அமைக்க வேண்டும்,” என்று அமைச்சு சொன்னது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity