ஹாலண்ட் வில்லேஜில் உள்ள ஒரு கொண்டோமினியத்தில், வீடு ஒன்றின் வெளியே ஒரு நாய் கட்டிப் போட்டிருப்பதன் தொடர்பில் சிங்கப்பூர் விலங்கு வதைத் தடுப்பு சங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கொண்டோமினியத்தின் முதல் தளத்தில் உள்ள நீச்சல் குளத்துக்கு அருகில் பிற்பகல் 2.30 முதல் 4.30 மணிக்குள்ளாக வயதான நாய் ஒன்றைக் கட்டிப்போட்டிருப்பதைக் கண்டதாக பாலின் டியோ என்பவர் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
வீட்டின் குப்பைத் தொட்டி வைக்கும் இடத்துக்கு அருகில் ஒரு வயதான நாய் கட்டிப்போடப்பட்டிருப்பதாகவும் அந்த நாய் சாப்பிடுவதற்கு அழுக்கான பாத்திரத்தில் உணவு வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தமது பதிவில் தெரிவித்திருந்தார்.
அதே வீட்டில் சிறிய, இளைய, அழகான மற்றொரு நாய்க்குட்டி காணப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
விலங்கு மற்றும் கால்நடை சேவைகள் அமைப்பின் அதிகாரிகள் அந்த வீட்டைப் பார்வையிட்டதாகவும் தற்போது அந்த நாய் வீட்டுக்குள் சுதந்திரமாகத் திரிவதாகச் சொன்னதாகவும் பாலின் தனது மற்றொரு பதிவில் குறிப்பிட்டார்.
செயின்ட் டாக் அவேர்னஸ் சிங்கப்பூர் அமைப்பின் ஃபேஸ்புக் பதிவில், அந்த நாய் வயிற்றுப்போக்கால் சிரமப்படுவதாகவும் சற்று நேரத்துக்கு அருகில் யாரும் இல்லாமல் தனித்து விடப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டது.
அந்த நாய் கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் இது அடிக்கடி நிகழும் சம்பவமல்ல என்றும் குறிப்பிட்டது.
இந்தச் சம்பவம் குறித்து தங்களுக்குத் தெரியும் என்றும் விசாரணை செய்து வருவதாகவும் சிங்கப்பூர் விலங்கு வதைத் தடுப்புச் சங்கம் ஸ்டோம்பிடம் தெரிவித்தது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity