கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சி ஒன்று நேற்றுக் காலை சின் மிங் சாலையில் தீப்பிடித்துக்கொண்டதால் ஒரே பரபரப்பு.
பிரைட் ஹில் சாலைக்கும் சின் மிங் அவென்யூவுக்கும் இடையே உள்ள சாலைச் சந்திப்பில் வாகனம் தீப்பிடித்துள்ளது குறித்துத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
சம்பவ இடத்திற்குக் காலை 9.10 மணியளவில் சென்ற அதிகாரிகள், தண்ணீர் பீய்ச்சியடிக்கும் ஒரு கருவியைக் கொண்டு தீயை அணைத்தனர். டாக்சியின் என்ஜின் பகுதியில் தீ மூண்டதாக நம்பப்படுகிறது.
டாக்சியிலிருந்து குபுகுபுவென்று புகை வெளியேறுவதைப் புகைப்படங்கள் காட்டுகின்றன. நெருப்பை அணைக்கும் வரை சாலையின் இரு பக்கங்களிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதில் எவருக்கும் காயமில்லை.
படம்: ஜெரால்டின் கோ