உந்து நடமாட்டத்தை ஊக்குவிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பகிர்வு சைக்கிள் நிறுவனங்களுக்கான உரிமக் கட்டணத்தைப் பாதியாக நிலப் போக்குவரத்து ஆணையம் குறைத்ததையடுத்து, அந்நிறுவனங்கள் மொத்தம் $570,000க்கும் தொகையை ஆணையத்திடமிருந்து திருப்பிப் பெற்றுக்கொண்டன.
இந்த நடவடிக்கையை பகிர்வு சைக்கிள் நிறுவனங்கள் பெரிதும் வரவேற்றுள்ளன. தாங்கள் திரும்பப் பெற்றுக்கொண்ட தொகையைப் பகிர்வு சைக்கிள் செயல்பாடுகளுக்கு முதலீடு செய்யப் போவதாக அந்நிறுவனங்கள் குறிப்பிட்டன. இதன் விளைவாக, சைக்கிள் கட்டணம் குறையக்கூடும்.
தற்போது பகிர்வு சைக்கிள்களை 30 நிமிடங்கள் ஓட்டுவதற்கு 50 காசு முதல் $1 வரை செலவாகும்.
பகிர்வு சைக்கிள்கள் கண்ட இடங்களில் நிறுத்தி வைக்கப்படும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க உரிமக் கட்டண முறையை நிலப் போக்குவரத்து ஆணையம கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது.
உரிமக் கட்டணங்களைத் தவிர்த்து, வைப்புத் தொகையாக சைக்கிள் ஒன்றுக்கு $30யை நிறுவனங்கள் செலுத்த வேண்டியிருந்தது. புதிய கட்டண முறையின் கீழ் இந்த வைப்புத் தொகை தொடர்ந்து நடப்பில் இருக்கும்.
ஒவ்வொரு உரிமமும் ஈராண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
ஒழுங்குமுறை தொடர்பான செலவினத்தை ஈடுசெய்ய உரிமக் கட்டணங்கள் உதவும் என்றும் அபராதம் செலுத்தப்படாத சூழலில் வைப்புத் தொகை உதவும் என்றும் போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின் ஏற்கெனவே கூறியிருந்தார்.