சிங்கப்பூரின் ஒன்பதாவது சமூக மருத்துவமனை ஊட்ரம் பகுதியில் சிங்கப்பூர் பொது மருத்துவமனையை ஒட்டி நேற்று திறந்து வைக்கப்பட்டது.
மூத்த நோயாளிகள் அதிகம் நிறைந்த தென்பகுதியில் வேறுபட்ட பராமரிப்பு வசதிகளுடன் அமையும் முதல் சமூக மருத்துவமனை இது.
65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் சிங்கப்பூரின் தென்பகுதியில் வசிப்பதாக அரசாங்கப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
‘ஊட்ரம் சமூக மருத்துவமனை’ (ஓசிஎச்) பொது வீடமைப்புப் பேட்டையை நினைவுபடுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு அதற்குத் தகுந்த வகையில் படுக்கை, நாற்காலி, மேசை, அலமாரி போன்றவை அமைக்கப்பட்டு உள்ளன.
அதனால் வீடு திரும்பும் நோயாளிகள் சிகிச்சைக்குப் பின்னர் செய்ய வேண்டியவற்றை இங்குக் கற்றுக்கொள்ள முடியும்.
உதாரணமாக, சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் நோயாளிகள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் விதத்தைக் கற்றுக் கொள்ளக்கூடிய வசதி இந்த மருத்துவமனையில் இருக்கும்.
அதற்கேற்ற வகையில் அதன் உள்வடிவமைப்பு பேருந்துபோலவும் ரயில்போலவும் அமைக்கப்பட்டு இருக்கும்.
இன்னும் மூன்றாண்டுகளில் இம்மருத்துவமனை முழுமையாகத் திறக்கப்பட்ட பின்னர் சுகாதாரப் பராமரிப்பு முறையில் 545 படுக்கைகள் கூடுதலாக இணையும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மருத்துவமனை திறப்பு நிகழ்வில் பேசிய சட்ட, சுகாதார மூத்த துணை அமைச்சர் எட்வின் டோங், நீண்டகாலப் பராமரிப்பு தேவைப்படும் அதிகமான நலிவுற்ற நோயாளிகள் மருத்துவமனைகளை நாடு வதாகக் குறிப்பிட்டார்.
நோயாளிகள் நோய்களி
லிருந்து மீண்டு வர சமூக மருத்துவமனைகள் முக்கிய பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்ட அவர், மருத்துவமனைகளில் இருந்து வீட்டுக்கு நோயாளிகள் எளிதில் மாறிக்கொள்ளவும் அவை உதவுவதாகக் கூறினார்.
இந்தப் புதிய மருத்துவமனையின் உச்சியில் அமைந்துள்ள தோட்டம் நோயாளிகள் மறுவாழ்வுப் பயற்சிகளை மேற்கொள்ள உதவிபுரியும்.
படி ஏறுவது, சாய்வுப் பாதையைப் பயன்படுத்துவது, கரடுமுரடான பாதையில் நடப்பது போன்ற வேறுபட்ட நிலப்பகுதிகளைப் பயன்படுத்தும் பயிற்சிகளை அவர்கள் இங்கு மேற்கொள்ளலாம்.
பாதசாரிகள் சாலைக் கடப்புப் போன்ற பாவனைத் தளங்களும் அங்கு இருக்கும். சக்கர நாற்காலி நோயாளிகள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயிற்சியையும் இங்கு பெறலாம்.
இம்மருத்துவமனையில் இருந்து சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குச் செல்லும் இணைப்புப் பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு இந்த சமூக மருத்துவமனைக்கான நில அகழ்வு சடங்கு நடைபெற்றபோது அந்த நிகழ்ச்சியில் பேசிய சுகாதார அமைச்சர் கான் கிம் யோங், புதிதாக அமையவிருக்கும் சமூக மருத்துவமனைக்கு அருகே உள்ள புக்கிட் மேரா வட்டாரம் சிங்கப்பூரில் 65 வயதுக்கு மேற்பட்ட மக்கள் அதிகம் வசிக்கும் இரண்டாவது பகுதி என்று குறிப்பிட்டிருந்தார்.